முகப்பு
தற்போதைய செய்திகள்

உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள்: வெளிவந்த புதிய தகவல்!

உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை, ராணுவத்தின் மூலம் அவர்களை மீட்க நடவடிக்கை.

Updated On : 15 செப்டம்பர் 2024, 10:50 am IST
உத்தரகண்ட் நிலச்சரிவு - DIN
பகிர்:

சிதம்பரத்திலிருந்து ஆதிகைலாஷ் சென்ற 30 பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கிய நிலையில், அவர்களை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சிதம்பரத்திலிருந்து 18 ஆண்கள், 12 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் ஆதிகைலாஷ் சுற்றுலாவிற்கு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், ஆதிகைலாஷ் செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டு 18 கிலோமீட்டர் தூரத்தில் 30 பேரும் சிக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் சென்ற ஜீப்பில் பெட்ரோல் இல்லாததால் நின்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

ஆந்திரத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளம் காரணமாக அவர்களது பயணத்தில் சிறுது தாமதம் ஏற்பட்டது. இருந்தபோதும், ஆதிகைலாஷ் சுற்றுலா தளத்தை குறிப்பிட்ட நாளில் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர். சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வரும்போது நிலச்சரிவு ஏற்பட்டதைடுத்து, உத்தரகண்ட் மாநிலத்தில் பாதுகாப்பான இடத்தில் தற்போது தங்கியுள்ளனர்.

உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள். - Din

மீண்டும் இன்று காலை ராணுவம் மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது திடீரென மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது.

அங்கு நிலச்சரிவில் சிக்கியுள்ள ரவிசங்கர் வசந்தா தம்பதியர் சிதம்பரத்தில் உள்ள தனது மகன் ராஜனுக்கு செல்ஃபோன் மூலம் அழைத்தனர். அவர்கள் பேசுகையில், தற்போது நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது நாங்கள் விடியோ எடுத்து உள்ளோம், தங்களுக்கு அனுப்புகிறோம் என்று கூறியுள்ளனர்.

அதன் பின்பு, பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும், வாகனத்தில் பெட்ரோல் வசதி மற்றும் இருபுறத்திலும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மகன் ராஜனுக்கு செல்ஃபோன் மூலம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அதற்குப் பிறகு தற்போது வரை அவர்கள் செல்ஃபோனில் இருந்து எந்த விதமான தகவலும் வரவில்லை என ராஜன் தெரிவித்தார்.

இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கிய பக்தர்கள், சிதம்பரத்தில் உள்ள தனது உறவினரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண்மைத் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தகவல் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து மீட்பு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார்.

இதனை அடுத்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரகண்ட் மாநில அதிகாரிகளை தொடர்பு கொண்டு ராணுவத்தின் மூலம் அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.