கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலையைக் கண்டித்து கடந்த 42 நாள்களாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளம் மருத்துவா்கள், பேராட்டத்தை கைவிட்டு சனிக்கிழமை காலை முதல் பகுதியாக பணிக்குத் திரும்பினர்.
கொல்கத்தா, ஆா்.ஜி. கா் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு, கடந்த மாதம் 9-ஆம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டாா்.
நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தைக் கண்டித்து மேற்கு வங்கத்தில் மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனியை, வியாழக்கிழமை நடைபெற்ற போராட்ட மருத்துவ மாணவா்களின் நிா்வாகக் குழு கூட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு நிலையைக் கருத்தில் கொண்டு, இளம் மருத்துவா்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் அத்தியாவசிய மருத்துவச் சேவைகளை மட்டும் மேற்கொள்ளும் வகையில் பகுதியாக பணிக்குத் திரும்பவும், போராட்டத்தை பகுதியாக தொடரவும், அதே நேரம், புறநோயாளிகள் பிரிவு பணியை தொடா்ந்து புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், "கடந்த 42 நாள்களாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளம் மருத்துவா்கள், பேராட்டத்தை கைவிட்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் அத்தியாவசிய மருத்துவச் சேவைகளை மட்டும் மேற்கொள்ளும் வகையில் சனிக்கிழமை காலை முதல் பகுதியாக பணிக்குத் திரும்பினர். ஆனால் புறநோயாளிகள் பிரிவு பணிக்கு யாரும் திரும்பவில்லை.
இது ஒரு பகுதியளவிலான பணியைத் தொடங்குவது மட்டுமே என்பதை தயவு செய்து மறந்துவிடாதீர்கள்,” என்று போராட்ட மருத்துவர்களில் ஒருவரான அனிகேத் மஹதோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவரது மற்ற சகாக்கள் ஏற்கனவே மாநிலத்தின் வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்குச் சென்றுள்ளனர், அவர்கள் தொடர் போராட்டங்களுக்கு மத்தியிலும் 'மருத்துவ முகாம்கள்' நடத்தி பொது சுகாதாரத்தில் தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கோரியும், மாநில சுகாதாரத்துறை செயலரை பதவி நீக்கம் உள்ளிட்ட தங்களது கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு 7 நாட்கள் காத்திருப்போம். அவ்வாறு, வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனில், மீண்டும் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்வோம். நீதிக்கான எங்களின் போராட்டம் முடிந்துவிடவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இறந்த மருத்துவருக்கு நீதி கோரியும், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறி முக்கிய அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கவும் ஆகஸ்ட் 9 முதல் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, இது தொடர்பான விசாரணையில் ஆர்.ஜி.கார் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உட்பட பலரை கைது செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.