ஆட்சிக் கவிழ்ப்பின்போது கைதான முக்கிய அதிகாரிகளை விடுவித்த நைஜர் ராணுவ அரசு!
நைஜர் ராணுவ அரசு முக்கிய அதிகாரிகளை விடுதலை செய்துள்ளதைப் பற்றி...
நைஜர் நாட்டின் ராணுவ அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்த முக்கிய அரசு மற்றும் ராணுவ அதிகாரிகளை விடுதலை செய்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் கடந்த 2023 ஆம் ஆண்டு மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது, முன்னாள் அதிபர் முஹம்மது பசோவுமின் அரசில் பணியாற்றிய ஏராளமான முக்கிய அரசு மற்றும் ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது நைஜர் நாட்டைச் சீரமைக்கும் முயற்சியெனக் கூறி ராணுவ அரசின் அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அதிகாரிகளை விடுதலை செய்துள்ளனர்.
இதுகுறித்து, நேற்று (ஏப்.1) இரவு அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட அறிக்கையின்படி சமீபத்தில் நடைபெற்ற தேசிய சீர்திருத்த மாநாட்டின் பரிந்துரைகளின்படி இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவின்படி, முன்னாள் அதிபர் மஹமதோவ் இஸோஃபோவின் மகனும் முன்னாள் எண்ணெய் வளத்துறை அமைச்சருமான மஹாமனே சனி இஸோஃபோ உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் விடுதலையாகியுள்ளனர்.
மேலும், இதற்கு முந்தைய ஆட்சியில் அரசுக்கு எதிராக செயல்பட்டு ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராணுவ அதிகாரிகளும் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
முன்னதாக, அந்நாட்டில் மாற்றியமைக்கப்பட்ட அரசியலமைப்பின் புதிய சாசனத்தின் கீழ் ராணுவ அரசின் தலைவர் அப்தொரஹமானே திசியானி ஐந்து ஆண்டுகளுக்கு நைஜரின் இடைக்கால அதிபராக பதவியேற்ற சில நாள்களிலேயே இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: யூத மதகுருவைக் கொன்ற 3 பேருக்கு மரண தண்டனை!