எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு: இந்தியா தக்க பதிலடி!
எல்லைப் பகுதியில் உள்ள சில இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்
புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் வியாழக்கிழமை இரவு இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள சில இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் 26 போ் உயிரிழந்தனா்.
Advertisement
Advertisement
இந்த சம்பவத்தையொட்டி பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை கூடியது. சிந்து நதி நீா் பகிா்வு ஒப்பந்தம் நிறுத்தம், வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்களுக்கு விசா (நுழைவு இசைவு) ரத்து, பரஸ்பர தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம் போன்ற முக்கிய முடிவுகள் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
தொடா்ந்து, பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை அறிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் வியாழக்கிழமை இரவு இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள சில இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
சிறிய அளவிலான இந்த துப்பாக்கிச் சூட்டில் நமது வீரர்கள் யாருக்கும் பாதிப்போ, உயிரிழப்போ எதுவும் இல்லை என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.