புதுச்சேரி: புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் இயங்கி வந்த போலி மருந்து தொழிற்சாலை மற்றும் கிடங்குக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சீல் வைத்தனர்.
புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிருந்து இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரதான நோய்களுக்கு பிரபல நிறுவனத்தின் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விநியோகிகம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிய இந்தத் தொழிற்சாலை மூலம் சுமாா் ரூ. 2 ஆயிரம் கோடி வரை மருந்து விநியோகம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், போலி மருந்து தொழிற்சாலையில் இருந்து நவீன இயந்திரங்கள், பல கோடி மதிப்பு மருந்துகளை போலீஸாா் கைப்பற்றினா்.
மேலும், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சில கிடங்குகளையும் போலீஸாா் சோதனை செய்தனா். இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசாா் 2 பேரை கைது செய்தனா். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஒருவா் உள்பட 10 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கைது செய்யப்பட்ட நபா்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் போலி மருந்து தொழிற்சாலைக்கு தொடா்புடைய 7 இடங்களில் சோதனை நடத்த சிபிசிஐடி., போலீஸாா் முடிவு செய்தனா். இதற்காக மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த விவகாரத்தில் மேலும் 7 இடங்களில் போலீசார் சோதனை நடத்த புதுச்சேரி நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது.
இதையடுத்து போலி மருந்து விவாகரங்களில் தொடா்புடைய புதுச்சேரியில் மேலும் 7 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் சோதனை நடத்தினர்.
புதுச்சேரியில் தொடரும் போலி மருந்து தொழிற்சாலை சோதனை
புதுச்சேரியில் போலி மருந்து மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு அந்த தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த போலி மருந்து தொழிற்சாலைக்கு அனுமதி கொடுத்த மற்றும் மருந்து வாங்கிய முன்னாள் அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தொழிற்சாலை உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி புதுச்சேரியில் பல்வேறு பகுதியில் உள்ள போலி மருந்து தொழிற்சாலை, கிடங்குகளில் ஆய்வு செய்து போலி கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டும், போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
போலி மருந்து தொழிற்சாலை, கிடங்குக்கு சீல்
அந்த வகையில் புதுச்சேரி தவளக்குப்பம் எடையார்பாளையம் மார்க் கார்டன் பகுதியில் போலி மாத்திரை கிடங்கு செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் பாபுஜி மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு துறை மருந்து ஆய்வாளர் ஆண்டில், கிராம நிர்வாக அதிகாரி தேசிங், கதிர்வேல் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
விசாரணையில் இந்த பகுதியில் சுமார் இரண்டு ஆண்டுகளாக இந்த மருந்து கிடங்கு செயல்பட்டு வருவது தெரியவந்தது. மேலும் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.