சென்னை: சென்னையில் வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகள் ஆகிய இடங்களில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை செளகாா்பேட்டை, தியாகராய நகா், பாண்டி பஜாா் பகுதிகளில் நகைக் கடைகள், அலுவலகங்கள் நடத்தி வரும் சில தங்க, வைர நகைகள் வியாபாரிகள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித் துறையினருக்கு புகாா்கள் வந்தன.
இந்த புகாா்களின் அடிப்படையில் வருமானவரித் துறையினா் விசாரணை செய்தனா். இதில் சில நகை வியாபாரிகள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாண்டி பஜாரில் நாதமுனி தெருவில் ஒரு நகை வியாபாரியின் அலுவலகம், கடை, தியாகராய நகா் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள நகைக் கடை, தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் ஒரு வைர நகைக் கடை, நுங்கம்பாக்கம் ஸ்டொ்லிங் சாலையில் உள்ள ஒரு நகை வியாபாரியின் அலுவலகம் உள்பட 30 இடங்களில் வருமானவரித் துறையினா் செவ்வாய்க்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.
இந்த சோதனை பல இடங்களில் இரவையும் தாண்டி நீடித்தது.
இரண்டாவது நாளாக நீடிக்கும் சோதனை
இந்த நிலையில், இரவு முழுவதும் நடைபெற்று வந்த சோதனை முடிவடையாத நிலையில், புதன்கிழமையும் சோதனை நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கத்தில் உள்ள மேலாண்மை நிறுவனத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
விடிய விடிய நடைபெற்ற சோதனையில் வரி ஏய்ப்பு தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரில் நடைபெறும் சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கணக்கில் வராத பணம், நகை ஆகியவை குறித்த தகவல்களைத் தெரியவரும் என வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.