15 தலிபான் தீவிரவாதிகள் கைது!
பாகிஸ்தானில் 15 தலிபான் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
பாகிஸ்தானில் 15 தலிபான் தீவிரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதத் தடுப்புப் படையினர் கிடைக்கப்பெற்ற 143 ரகசியத் தகவல்களின் அடிப்படையில் கடந்த வாரம் முழுவதும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
அப்போது வடக்கு வசீரிஸ்தானில் தெஹ்ரீக்-இ-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பைச் ஓர் முக்கிய பயங்கரவாதி உள்பட 15 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு கட்டடங்களை தகர்க்கும் முயற்சியுடன் செயல்பட்டு வந்த வடக்கு வசீரிஸ்தானைச் சேர்ந்த பயங்கர ஆபத்தான தலிபான் தீவிரவாதி ஒருவர் லாஹூரில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஷியப் பாடகர் மர்ம மரணம்!
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஒரு ஐ.ஈ.டி எனப்படும் நவீன வெடி குண்டு, 6 டெட்டோனேட்டர்கள்,18 அடி நீள ஃபியூஸ் கம்பிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட புத்தகம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அவர்கள் 15 பேரும் பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் பொது மக்களை அச்சுறுத்த தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், தற்போது கைது செய்யப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக அவர்கள் அனைவரும் ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.