முகப்பு
தற்போதைய செய்திகள்

துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசப்பட்ட பனியன் நிறுவன மேலாளர்

அவிநாசி அருகே கருவலூரில் சொத்து தகராறில் பனியன் நிறுவன மேலாளரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய சம்பவம்

Updated On : 22 பிப்ரவரி, 2025 at 7:05 AM
துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட கோவிந்தசாமி.
பகிர்:

அவிநாசி: அவிநாசி அருகே கருவலூரில் சொத்து தகராறில் பனியன் நிறுவன மேலாளரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கருவலூர் காளிபாளையம் பகுதியை சேர்ந்த சடையப்பன் மகன் கோவிந்தசாமி (54). பனியன் நிறுவனம் மேலாளர். இவருக்கும் இவரது உறவினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை முதல் கோவிந்தசாமியை காணவில்லை என அவரது குடும்பத்தினர் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவிநாசி போலீஸார், பல்வேறு இடங்களில் கோவிந்தசாமியைத் தேடியும் கிடைக்கவில்லை.

சொத்து தகராறில் துண்டு துண்டாக வெட்டி தொரவலூர் குளத்தில் வீசப்பட்ட பனியன் நிறுவன மேலாளர் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள் மற்றும் போலீஸார்.

இந்த நிலையில் பெருமாநல்லூர் அருகே தொரவலூர் குளத்தில் வெள்ளைச் சாக்கு கட்டிய அட்டைப்பெட்டி மிதப்பதாக சனிக்கிழமை போலீஸாருக்கு கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பாா்வையிட்டனா். அப்போது வெள்ளை சாக்கு கட்டிய அட்டைப்பெட்டி மிதப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அட்டைப்பெட்டியை குளத்திலிருந்து போலீஸாா் மீட்டனா். அதில் காணாமல் போன கோவிந்தசாமி உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அட்டைப்பெட்டியில் வைத்து குளத்தில் தூக்கி வீசியிருப்பது தெரிய வந்தது.

மேலும் அவரது உடலின் மீதி பாகங்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் பெருமாநல்லூர் அவிநாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பனியன் நிறுவன மேலாளரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசியது யாா் என்பது குறித்து அவிநாசி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →