முகப்பு
தற்போதைய செய்திகள்

விடாமல் விரட்டிய இளைஞர்கள்! தப்பியோடிய வாகனம் விபத்துக்குள்ளானதில் இளம் பெண் பலி!

மேற்கு வங்கத்தில் இளைஞர்களிடமிருந்து தப்பியோடிய வாகனம் விபத்துக்குள்ளானதில் இளம் பெண் பலியாகியதைப் பற்றி...

Updated On : 24 பிப்ரவரி, 2025 at 11:33 AM
கோப்புப் படம்
பகிர்:

மேற்கு வங்கத்தின் பர்தாமன் மாவட்டத்தில் விடாமல் விரட்டிய இளைஞர்களிடம் தப்பியோட முயன்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இளம் பெண் பலியாகியுள்ளார்.

ஹூக்லி மாவட்டத்தைச் சேர்ந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான சுசந்திரா சத்தோபாதய் (வயது 27), இவர் இன்று (பிப்.24) அதிகாலை 3 மணியளவில் தன்னுடன் பணிபுரியும் 3 பேருடன் ஓர் நிகழ்ச்சிக்காக காயா பகுதியை நோக்கி தனது காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, வழியில் ஒரு பெட்ரோல் நிரப்பி விட்டு தங்களது பயணத்தைத் தொடர முற்பட்டபோது மற்றொரு வெள்ளை நிற காரில் 5 இளைஞர்கள் பின் தொடர்ந்து துரத்தியுள்ளனர். மேலும், சுசந்திராவை நோக்கி ஆபாசக் கருத்துக்களை தெரிவித்ததுடன், கண்மூடித் தனமாக அவர்களது வாகனத்தை ஓட்டி அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பனகார் பகுதிக்கு அருகில் வந்தபோது அந்த இளைஞர்கள் சுசந்திராவின் காரை வழிமறிக்க முயன்றதில் அங்குள்ள சாலைத் தடுப்பில் மோதி அவரது கார் தலைகீழாக கவிழ்ந்தது. இதில், முன்னிருக்கையில் அமர்ந்திருந்த சுசந்திராவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து ஏற்பட்டவுடன் அந்த இளைஞர்கள் தங்களது காரை அங்கேயே விட்டு தப்பியோடியுள்ளனர்.

இதையும் படிக்க: வயநாடு நிவாரண நிதி: பிரதமர் மோடிக்கு பிரியங்கா கடிதம்!

பின்னர், சுசந்திரா உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், அவருடன் பயணித்த 3 பேரும் படுகாயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்த காவல் துறையினர் இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அவர்கள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இந்த விபத்துக்கு காரணமான 5 இளைஞர்களும் மது போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

மேலும், சுசந்திராவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வு சோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்கும் நடவடிக்கைகளை ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →