முகநூலில் பழக்கமான பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணை மணப்பதற்காக சட்டவிரோதமாக அந்நாட்டிற்குள் நுழைந்த இந்தியர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த படால் பாபு என்ற நபர் முகநூலில் பழக்கமான சனா ராணி என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் இந்திய எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் மண்டி பஹாவுதீன் மாவட்டத்தில் அந்நாட்டு காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்தப் பெண்ணும் படால் பாபுவும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக முகநூலில் நண்பர்களாக இருந்ததாகவும், ஆனால், அவரைத் திருமணம் செய்யும் எண்ணத்தில் அவர் இல்லை எனவும் அவர் வாக்குமூலம் அளித்ததாக அந்நாட்டு காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: ஜில் பைடனுக்கு பிரதமர் மோடி அளித்த வைரம்! மிகக் காஸ்ட்லியான பரிசாக அறிவிப்பு!
ஆனால், இந்த வாக்குமூலத்தை சனா ராணி சுயமாக முன்வந்து அளித்தாரா அல்லது கட்டாயப்படுத்தப்பட்டு அவரிடமிருந்து பெறப்பட்டதா என்று உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும், படால் பாபுவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் தனது காதலியை மணப்பதற்காகத்தான் பாகிஸ்தானுக்குள் நுழைந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவர் மீது பாகிஸ்தான் வெளிநாட்டவர் சட்டம் 13 மற்றும் 14 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கிற்கான தீர்ப்பு வருகிற ஜன.10 அன்று வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இதேபோல் கடந்த 2024 ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணும், 25 வயதுடைய முலாயம் சிங் யாதவ் எனும் இந்தியரும் ஆன்லைன் கேமின் மூலமாகக் காதலித்து இருவரும் நேபாளத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும், அஞ்சு எனும் இந்தியப் பெண் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த நசுருல்லா என்பவரை காதலித்து அந்நாட்டுற்கு சென்று திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.