4 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு! சர்ச்சைப் பேச்சு!
மத்தியப் பிரதேசத்தில் பிராமண நலவாரியத் தலைவரின் சர்சை பேச்சுக் குறித்து..
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்யும் பிராமணத் தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அம்மாநில பாஜக அரசின் பிராமண நலவாரியத் தலைவர் பேசியுள்ளார்.
இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய மத்தியப் பிரதேச மாநில அரசின் பிராமண நலவாரியத் தலைவர் விஷ்னு ரஜவுரியா கூறியதாவது, “நாம் நமது குடும்பங்களை கவனிக்கத் தவறியதினால்தான் மதவெறியர்கள் அதிகமாகிவிட்டார்கள் எனவே வருங்காலத் தலைமுறையினரின் பாதுகாப்பிற்கு தற்போதைய இளம் தலைமுறையினர்தான் பொறுப்பு எனக் கூறினார்.
அதனால், பிராமணர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இல்லை என்றால் இந்த நாட்டை மதவெறியர்கள் கைப்பற்றிவிடுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: அவசரநிலை: சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.20,000; ஒடிசா அரசு
மேலும், தற்போதைய இளைஞர்களுக்கு கல்விதான் முக்கியம் என்று கற்பிக்கப்படுவதால் அதற்கு நிறைய செலவாகும் என்ற எண்ணத்தில் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்கிறார்கள் என்று பேசிய அவர், 4 குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பிராமணத் தம்பதிகளுக்கு நலவாரித்தினால் ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து, தற்போது சர்சையான நிலையில் அவர் கூறியது தனது சொந்த முயற்சி என்றும் அது அரசு திட்டமில்லை என்றும் விஷ்னு ரஜவுரியா கூறியுள்ளார்.
முன்னதாக, மத்தியப் பிரதேச அரசில் அவர் வகிக்கும் பதவியானது அமைச்சர் பதவிக்கு இணையான செல்வாக்கு உடையது. இருப்பினும், அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசு அவரது கருத்துக்கும் கட்சிக்கும் எந்தவொரு சம்பந்தமுல் இல்லை எனத் தெரிவித்துள்ளது.