'ஆம்பள’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள்.. ஹிப்ஹாப் தமிழா பகிர்ந்த பதிவு!
இயக்குநர் சுந்தர்.சியின் ’ஆம்பள’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 10 ஆண்டுகள்....
சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் தயாரித்து நடித்த ‘ஆம்பள’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் (ஜன.15) 10 ஆண்டுகள் ஆகின்றது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நகைச்சுவைக் கலந்த ஆக்ஷன் படமாக திரையரங்குகளில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் அதுவரை சுயச்சையான இசைக்கலைஞர்களாக இருந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் ஜீவா திரைப்பட இசையமைப்பாளர்களாக அறிமுகமாகினர்.
இந்த திரைப்படம் விஷால், ஹன்சிகா, வைபவ், பிரபு, சதீஷ், சந்தானம், ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வரியா, விஜயக்குமார் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்களின் நடிப்பில் உருவாகி 2015 ஆம் ஆண்டின் பொங்கல் தினத்தன்று வெளியானது.
Advertisement
Advertisement
அப்போது, சங்கர் - விக்ரம் காம்போவில் வெளியான ’ஐ’ மற்றும் ஜீ.வி.பிராகாஷ் குமாரின் ’டார்லிங்’ ஆகிய திரைப்படங்களுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றியடைந்தது.
இதையும் படிக்க: தெலுங்கில் அறிமுகமாகிறார் நடிகர் விக்ரம் பிரபு! புதிய போஸ்டர் வெளியீடு!
இந்த திரைப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா குழு மொத்தம் 6 பாடல்களை இசையமைத்திருந்தனர். அந்த 6 பாடல்களும் ’சூப்பர் ஹிட்’ ஆனது இந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.
இருப்பினும், இந்த திரைப்படத்தில் வரும் ஓர் காட்சியில் மாமியாரான ரம்யா கிருஷ்ணனை காப்பாற்ற வரும் கதாநாயகன் விஷால் போலீஸ் வேடமணிந்து பறந்து வரும் ஜீப்பின் முன்னால் கால் மீது கால் போட்டுக்கொண்டு அமர்ந்து வரும் காட்சி அப்போது முதல் இப்போது வரை ஓர் முக்கிய மீம் டெம்பிளேட்டாகவே இருக்கின்றது.
இந்நிலையில், ஆம்பள திரைப்படத்தின் இசையமைப்பின்போது இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகர் விஷால் ஆகியோருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஹிப்ஹாப் ஆதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று (ஜன.15) பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் 10 ஆண்டுகளுக்கு முன் இது நடந்தது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதேப்போல், கடந்த 2013 ஆம் ஆண்டு சுந்தர்.சி-விஷால் காம்போவில் உருவான மதகஜராஜா திரைப்படம் இந்தாண்டு (2025) பொங்கல் விடுமுறைகளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. சுமார் 12 ஆண்டுகள் கழித்து திரையரங்குகளில் வெளியாகியிருந்தாலும் தற்போது அதனுடன் வெளியான மற்ற திரைப்படங்களுக்கு நல்ல ஒரு போட்டியாகவே அமைந்து ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.