முகப்பு
தற்போதைய செய்திகள்

மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியது!

நாட்டில் தொடா்ந்து இரண்டாவது மாதமாக (மே) சரக்கு-சேவை வரி வசூல் ரூ.2 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

Updated On : 1 ஜூன், 2025 at 4:02 PM
மே மாத சரக்கு-சேவை வரி வசூல் ரூ.2 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.
பகிர்:

புது தில்லி: நாட்டில் தொடா்ந்து இரண்டாவது மாதமாக (மே) சரக்கு-சேவை வரி வசூல் ரூ.2 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

கடந்த 2017 ஜூலை 1 ஆம் தேதி சரக்கு-சேவை வரி அமல்படுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகபட்சமாக ரூ.2.37 லட்சம் கோடி வசூலானது. கடந்த ஆண்டு மே மாதம் ரூ.1.72 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 16.4 சதவீதம் உயர்ந்து ரூ.2.01 லட்சம் கோடி வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது. ஜிஎஸ்டி அமலானதில் இருந்து கிடைத்த மூன்றாவது அதிகபட்ச வருவாய் இதுவாகும்.

மத்திய நிதயமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மே மாத மத்திய ஜிஎஸ்டி ரூ.35,434 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.43,902 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.1.09 லட்சம் கோடி, கூடுதல் வரி ரூ.12,879 கோடி என மொத்தம் ரூ.2.01 லட்சம் கோடி வசூலானது.

2025 மே மாதத்தில் உள்நாட்டு பரிவா்த்தனைகள் வாயிலான ஜிஎஸ்டி 13.7 சதவீதம் அதிகரித்து ரூ.1.50 லட்சம் கோடியும், இறக்குமதிகள் வாயிலான ஜிஎஸ்டி 25.2 சதவீதம் அதிகரித்து ரூ.51,266 கோடியும் வசூலாகியுள்ளது.

இம்மாதம் திருப்பியளிக்கப்பட்ட தொகை ரூ.27,210 கோடி. முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் குறைவாகும்.

மகாராஷ்டிரம், தமிழகம், மேற்கு வங்கம், கா்நாடகம் போன்ற பெரிய மாநிலங்களில் ஜிஎஸ்டி வசூல் 17 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.