160 கிலோ கஞ்சா பறிமுதல்! 7 பேர் கைது!
ஒடிசாவில் கஞ்சா கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
ஒடிசாவில் 160 கிலோ அளவிலான கஞ்சா இலைகளைக் கடத்திய 7 பேர் கலால் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலால் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் கஞ்சம் மாவட்டத்தின் பெர்ஹாம்பூருக்கு வெளியேவுள்ள சின்ஹலா கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மூன்று வாகனங்களிலிருந்து 160 கிலோ அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதைக் கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த கஞ்சாவின் மதிப்பானது சுமார் ரூ.50 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அதை பெர்ஹாம்பூர் வழியாக மும்பைக்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: இந்தியாவில் மாட்டிறைச்சி உற்பத்தி, ஏற்றுமதி அதிகரிக்கும்: அமெரிக்கா தகவல்!
இதனைத் தொடர்ந்து, கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்த சஜன் நாயக் (வயது 30), படாரா நாயக் (28), நாயன் நாயக் (35) மற்றும் தருண் நாயக் ஆகியோரையும், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அஜய் ஜகன் பெராட் (25), விஷால் பாஹுசஹேப் ரஹிஞ்ச் (32) மற்றும் அமோல் முரளிதர் ரஹிஞ்ச் (26) ஆகியோரையும் கலால் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து 3 கார்களும், 10 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.