28 சிறுமிகள் உள்பட மாயமான 39 குழந்தைகள் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!
தில்லியில் மாயமான 39 குழந்தைகள் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதைப் பற்றி...
புது தில்லியில் கடந்த 2 மாதங்களில் காணாமல்போன 28 சிறுமிகள் உள்பட 39 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு தில்லி மாவட்டத்தின் ரோஹினி நகரத்தில் கடந்த ஜனவரி 1 முதல் பிப்ரவரி 28 வரையிலான 2 மாதக் காலத்தில் காணாமல்போன 28 சிறுமிகள் உள்பட 39 குழந்தைகள் காவல் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறை உயர் அதிகாரி அமித் கோயல் கூறுகையில், குழந்தைகள் கடத்தப்பட்டது மற்றும் காணாமல்போனது குறித்த தகவல் கிடைத்தவுடன் அப்பகுதி காவல் துறையினர் விரைந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு குழந்தைகளைக் கண்டுபிடித்து மீட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: 160 கிலோ கஞ்சா பறிமுதல்! 7 பேர் கைது!
இதனைத் தொடர்ந்து, ரோஹினி நகரத்தின் அமன் விஹார், பிரேம் நகர், கஞ்சாவாலா, பேகம்பூர், கேஎன்கே மார்க், பிரசாந்து விகார், புத் விஹார், வடக்கு ரோஹினி மற்றும் விஜய் விஹார் ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த மாயமான குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் சோதனைச் செய்யப்பட்டு, மாயமான அல்லது கடத்தப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் ஆட்டோ நிறுத்தங்களிலும், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களிடமும் வழங்கப்பட்டு தேடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் தகவல் தருபவர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அருகிலுள்ள காவல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களின் உதவிகளோடு குழந்தைகளை தில்லி காவல் துறையினர் மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.