கடந்த கால ஆட்சியுடன் ஒப்பிட்டு கொலைகளின் எண்ணிக்கையை குறைத்து பேசுவதற்கு எதற்கு ஒரு அரசு இயங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, நிதிநிலை அறிக்கையை தான் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பேசுவார்களே தவிர, கொலை விவரங்களை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பேசுவது ஒரு அரசுக்கு அழகல்ல என்று தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, புதன்கிழமை சேலம், ஈரோடு, சிவகங்கை ஆகிய இடங்களில் நான்கு கொலை சம்பவங்கள் நடைபெற்று இருப்பது குறித்து பேச தொடங்கிய போது, முழுமையாக பேசுவதற்கு நேரம் ஒதுக்காமல் பேரவை தலைவர் வாய்ப்பு மறுத்தார். மக்கள் பிரச்னைகளை பேசுவதற்கு பேரவையில் வாய்ப்பு அளிக்கவில்லை என்றால் எதற்காக உள்ளே இருக்க வேண்டும் எனக் கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி கே.பழனிசாமி, பேரவையில் மக்கள் பிரச்னைகள் குறித்து நேரமில்லா நேரத்தில் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிமை உள்ளபோது, அந்த உரிமை தற்போது மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். நேற்றைய சட்டப்பேரவையில் திருநெல்வேலியில் நடைபெற்ற ஜாகிர் உசேன் படுகொலை சம்பவம் குறித்து பேசியபோது, இனி தமிழகத்தில் கொலை சம்பவங்கள் நடைபெறாது என்றும், அதற்கு முன்னதாகவே நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் விளக்கம் அளித்த அன்றே, ஈரோடு, சேலம், மதுரை, சிவகங்கை ஆகிய இடங்களில் நான்கு கொலை சம்பவங்கள் நடைபெற்றதாக தெரிவித்தார்.
இந்த கொலை சம்பவங்கள் குறித்து பேரவையில் பேசுவதற்கு அவை தலைவர் அனுமதி தரவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் கொலை, கொள்ளை போன்ற சட்டம்-ஒழுங்கு பிரச்னையை தடுத்து நிறுத்தாமல், திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக பழனிசாமி குற்றம் சாட்டினார்.
குற்றம் நடந்தால் கைது செய்வோம் என்று கூறுவதற்கு அரசாங்கம் எதிர்க்கு என்று கேள்வி எழுப்பிய பழனிசாமி, திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி, தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மூன்று மாதமாக தொடர்ந்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, புகார் அளித்தவரையே காவல்துறை அதிகாரிகள் அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்ததாக குற்றம் சாட்டினார்.
யார் வேண்டுமானாலும் என்னுடைய அறைக்கு நேரடியாக வந்து புகார் அளிக்கலாம் என முதல்வர் சொல்லி வந்த நிலையில், திருநெல்வேலி ஜாகிர் உசேன் அளித்த புகார் மனு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து நான் அளிக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் திசை திருப்பும் நோக்கத்திலேயே முதலமைச்சர் செயல்படுவதாகவும், கடந்த கால ஆட்சியுடன் ஒப்பிட்டு கொலைகளின் எண்ணிக்கையை குறைத்து பேசுவதற்கு எதற்கு ஒரு அரசு இயங்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். நிதிநிலை அறிக்கையை தான் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பேசுவார்களே தவிர, கொலை விவரங்களை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பேசுவது ஒரு அரசுக்கு அழகல்ல என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் தமிழகத்தில் நடைபெறும் கொலைகளை தடுப்பதற்கு என்ன நடவடிக்கைகளை ஆளும் திமுக அரசு எடுத்துள்ளது என்று இதுவரையில் முதல்வர் பதிலளிக்கவில்லை.
தொகுதி மறு வரையறை செய்வது குறித்து நாடாளுமன்றத்தில் தான் அழுத்தம் தர வேண்டுமே தவிர, வெளியில் இருந்து ஆலோசனை நடத்துவது எவ்விதத்திலும் பயன் தராது என்று கூறியவர், உலக முதல்வர் ஒரு ஷோ காண்பித்துக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் நடைபெறும் கொலை, ஊழல் போன்ற சட்டம்-ஒழுங்கு பிரச்னையை மறைக்கவே தொகுதி மறு வரையறை விவகாரத்தை திமுக அரசு கையில் எடுத்து உள்ளதாகவும், நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா என கேள்வி எழுப்பினார்.
டாஸ்மார்க் விவகாரத்தில் திமுக அரசும், அமைச்சரும் தவறு செய்ததால் பதற்றத்தில் இருப்பதாக குற்றம் சாட்டியவர், டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் கூடுதலாக வசூல் செய்வது குறித்தும், அதிகாரிகளுக்கு தெரிந்து தான் இந்த வசூல் நடைபெறுவதாக டாஸ்மார்க் பணியாளர் ஒருவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் ஆதாரங்களுடன் வைரல் ஆகி வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.