12 நாள்கள் கவனமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல்!
12 நாள்கள் கவனமாக திட்டமிடப்பட்டு பஹல்காம் தாக்குதல் நடந்த 13 நாள்களுக்குப் பிறகும் தாக்குதல்தான் 'ஆபரேஷன் சிந்தூர்'.
புதுதில்லி: ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் இந்தியப் பெண்களின் சிந்தூரத்தை அவமதித்தவர்களைப் பழிவாங்குவதற்காக, எதிரிகளையும் அதன் உளவுத்துறை வலையமைப்புகளையும் முழுமையான குழப்பத்தில் வைத்திருப்பதற்காக இந்தியா தொடர்ந்து தனது உத்தியை மாற்றியமைத்து வந்த நிலையில், 12 நாள்கள் கவனமாக திட்டமிடப்பட்டு பஹல்காம் தாக்குதல் நடந்த 13 நாள்களுக்குப் பிறகும் நடத்தப்பட்ட தாக்குதல்தான் 'ஆபரேஷன் சிந்தூர்'.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் பொறுப்பேற்றது.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கையை ஏந்நேரமும் மேற்கொள்ளும் என எதிா்பாா்க்கப்படுவதால் போா்ப் பதற்றம் அதிகரித்தது.
Advertisement
Advertisement
பஹல்காமுக்கு சுற்றுலா சென்ற அப்பாவி பொது மக்கள் மீது நடந்தப்பட்ட தாக்குதல், ஒவ்வோர் இந்தியனின் இதயத்தையும் கிழித்தெறிந்த வலியைக் கொடுத்துள்ளது. அமைதிக்கு வழி தேடும் யாத்திரையின் பாதை, ரத்தம் சிந்தும் பாதையாக மாறிவிடுவது வேதனையின் உச்சம்.
மத தீவிரவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் புகலிடம் கொடுத்த பாகிஸ்தான் மீது இந்தியா காலம்தாழ்த்தாது படை எடுக்க வேண்டும். 26 பேரைக் கொன்றவர்கள் அனைவரும் உலகின் கண்முன் நிறுத்தப்பட்டு கொல்லப்பட வேண்டும். சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பிறகும் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமானது என பலதரப்பிலும் கூறப்பட்டு வந்தது.
இச்சூழலில், 1971-ஆம் ஆண்டுக்கு பிறகு எதிரிகளின் தாக்குதலுக்குத் தயாராக இருக்க நாட்டின் முக்கிய மாவட்டங்களான ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக், பத்காம், பாரமுல்லா, குப்வாரா, ஸ்ரீநகா், அவந்திபோரா ஆகிய 6 மாவட்டங்கள் உள்பட நாட்டின் 300 மாவட்டங்களில் புதன்கிழமை மாலை 4 மணியில் இருந்து ஒத்திகை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஒத்திகைக்கு முன்னோட்டமாக பல்வேறு நகரங்களில் பொது இடங்களில் செவ்வாய்க்கிழமையே ஒத்திகை நடைபெற்றது.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்
இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜெய்ஸ்-இ-முகம்மது அமைப்பின் 4 இலக்குகள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இலக்குகள் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தளங்கள் என 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இந்திய முப்படைகள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
கோட்லி, பஹ்வால்பூர், முஸாஃபர்பாத் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்களைக் குறிவைத்து, எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவை பாதிப்பு
இதையடுத்து தற்போதைய சூழ்நிலை மற்றும் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, தர்மசாலா, லே , ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட வடமாநிலங்களின் சில விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட பகுதிகளுக்கான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது என ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
12 நாள்கள் திட்டமிடப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்'
இந்த நிலையில், 8 முதல் 9 நாள்கள் திட்டமிடப்பட்டு ஆபரேஷன் சிந்தூர் திட்டம் உருவாக்கப்பட்டதாகவும், அந்த திட்டத்தின்படி புத்திசாலித்தனமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத பகுதிகள் மற்றும் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் உத்திக்காக கூடுதலாக மூன்று முதல் நான்கு நாள்கள் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், எதிரிகளையும் அதன் உளவுத்துறை வலையமைப்புகளையும் முழுமையான குழப்ப நிலையில் வைத்திருப்பதற்காக, இந்தியா தனது உத்தியை தொடர்ந்து மாற்றியமைத்து வந்ததாகவும், இதனால் அவர்கள் இந்தியா தரப்பு பதிலுக்கான எதிர்பார்ப்பு தடுக்கப்பட்டாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, உரி தாக்குதல் நடந்து 12 நாள்களுக்குப் பிறகும், புல்வாமா தாக்குதலுக்கு 12 நாள்களுக்குப் பிறகும், பஹல்காம் தாக்குதல் 13 நாள்களுக்குப் பிறகும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி இரவு முழுவதும் கண்விழித்து தொடர்ந்து கண்காணித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளால் இந்தியாவில் பயங்கரவாதச் செயல்கள் நடந்த போதெல்லாம் பிரதமர் மோடி எந்தவித சமரசத்துக்கும் இடம்கொடுக்காமல் இருந்து வந்தார் என்பதையே காட்டுகிறது" என்றும், பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா உறுதியாக உள்ளதையே இது தெளிவுப்படுத்துவதாக தெரிவிக்கிறது.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் தலைநகரான முசாபராபாத்அருகே இந்திய ஏவுகணைத் தாக்குதலால் கட்டடம் முழுவதும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.