ஆப்கனின் முதன்மை விமானப் படைத் தளத்தின் மீது பாக். தாக்குதல்!
ஆப்கானிஸ்தானின் பாக்ரம் விமானப் படைத் தளத்தின் மீதான பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து...
ஆப்கானிஸ்தானின் பிரபல பாக்ரம் விமானப் படைத் தளத்தின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு எதிராக ஆபரேஷன் கசாப் லில் ஹக் எனும் பெயரில் பாகிஸ்தான் கடந்த பிப். 26 முதல் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்மூலம், இருநாடுகள் இடையிலான 2,600 கி.மீ. எல்லையில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானின் 53 ராணுவத் தளங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் முதன்மையான விமானப் படைத் தளமாகக் கருதப்படும் பாக்ரம் விமானப் படைத் தளத்தின் மீது மிகப் பெரியளவிலான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக, பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை (மார்ச் 4) தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில், அங்கு அமைந்திருந்த முக்கிய கட்டமைப்புகள் முழுவதுமாக அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் 50-க்கும் அதிகமான ராணுவத் தளங்களின் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை தலிபான் அரசு உறுதி செய்துள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுதான் காரணம் என அந்நாட்டு அரசு நீண்டகாலமாகக் குற்றம்சாட்டி வந்ததைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
மேலும், பாகிஸ்தான் தாக்கியதாகக் கூறப்படும் பாக்ராம் விமானப் படைத் தளத்தை மீண்டும் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென கடந்த 2025 ஆம் ஆண்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.