இராக்கில் அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணைத் தாக்குதல்!
இராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டது குறித்து...
இராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) அதிகாலை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால், தூரக வளாகத்தினுள் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு கரும்புகை வெளியாகியதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி, பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்க தூதரகத்தைக் குறிவைத்து 3 ட்ரோன்கள் மற்றும் 4 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஒரு ட்ரோன் வளாகத்தினுள் வெடித்துச் சிதறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்களைத் தடுக்கும் நடவடிக்கையில், அங்கிருந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனால், வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.