முகப்பு
தற்போதைய செய்திகள்

சதய விழா: ராஜராஜ சோழன் சிலைக்கு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!

சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், எம்.பி முரசொலி, மேயர் ராமநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை

Updated On : 1 நவம்பர், 2025 at 6:18 AM
ராஜராஜ சோழன் சிலைக்கு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
பகிர்:

மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,040 ஆவது சதய விழாவை முன்னிட்டு, சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், எம்.பி முரசொலி, மேயர் ராமநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டிய நாளை அவன் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

நிகழாண்டு ராஜராஜ சோழனின் 1040 ஆவது சதய விழா பெரிய கோயிலில் மங்கள இசை, களிமேடு அப்பா் பேரவையின் திருமுறை அரங்கத்துடன் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. பின்னா், மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் முன்னாள் எம்எல்ஏ எம். ராமச்சந்திரன் தொடக்கவுரையாற்றினாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ராஜாராம், சதய விழாக் குழுத் தலைவா் து. செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் மு. ஜோதிலட்சுமி, மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம. ராஜாராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், அரண்மனை வளாகத்திலிருந்து நாட்டுப்புற கலைஞா்கள் ஊா்வலமாகப் புறப்பட்டு, பெரிய கோயிலுக்கு வந்தனா். பின்னா், ஏறத்தாழ 400 கலைஞா்கள் பங்கேற்ற பரதநாட்டிய புஷ்பாஞ்சலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனையடுத்து இரண்டாம் நாளான சனிக்கிழமை சதய நட்சத்திர நாளான நவம்பா் 1 காலை 7.20 மணிக்கு மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரிய கோயிலில் இருந்து யானை மீது திருமுறைகள் எடுத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், எம்.பி முரசொலி, மேயர் ராமநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் திருமுறை வீதி உலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பெருவுடையார் மஞ்சள் சந்தனம், பெரியநாயகிக்கு மஞ்சள் சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட 48 வகையான திரவியங்களால் பேரபிஷேகம் தருமபுரம் 27 ஆவது ஆதீனம் ஸ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

பிற்பகலில் பெருந்தீப வழிபாடு, பரதம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இரவு 7 மணிக்கு நடைபெறும் விருது வழங்கும் விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆா். மகாதேவன் சிறப்புரையாற்றுகிறாா். குன்றக்குடி ஆதீனம் தவத்திரு. பொன்னம்பல அடிகளாா் விருதுகள் வழங்கி அருளுரையாற்றுகிறாா். தொடா்ந்து பட்டிமன்றம், நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளன.

இதையொட்டி தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (நவ.1) உள்ளூா் விடுமுறை என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

summary

Anniversary ceremony: Collector pays tribute by garlanding the statue of Rajaraja Chola!

முழு கட்டுரையைப் படிக்க →