புதுக்கோட்டை: ஒரு தேர்தலைக் கூட சந்திக்காதவர்களுடன் கூட்டணி ஏற்படலாம் என சொல்பவர்கள்தான் யோசிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
அதிமுக- பாஜக கூட்டணியில் இன்னொரு பெரிய கட்சி இணையப் போகிறது என்றும் மெகா கூட்டணி அமையப் போகிறது என்றும் தவெகவுடன் கூட்டணி அமைக்கப்படலாம் என்றும் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. தேர்தலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்துக்கு அதிமுக தான் தலைமை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவுபடுத்தியிருக்கிறார்.
பெரிய வார்த்தைகளைப் பேசலாமா?
அதேநேரத்தில் ஒரு பொதுத்தேர்தலைக் கூட சந்திக்காதவர்களுடன், ஒரு வார்டு கவுன்சிலர் கூட இல்லாதவர்களுடன் கூட்டணி அமைப்போம் என்பது போன்ற பெரிய வார்த்தைகளைப் பேசலாமா என்பதை அவர்தான் யோசித்துப் பார்க்க வேண்டும்.
அதிமுகவும், பாஜகவும் ஒரு குடையின் கீழ் இணைந்து தோ்தலைச் சந்திக்கிறோம். தமிழகத்திலும் நல்லாட்சி மலர வேண்டும் என்றாா்.
அமைச்சர் சேகர்பாபு நல்ல நண்பர்தான். எனது பதவி மியூசிக்கல் சேர் என்கிறார். எனது பதவி 3 ஆண்டுகள் தான். ஆனால் அவரது அமைச்சர் பதவி இன்னும் 3 மாதங்கள் தான்.
அதிமுகவில் பிளவு இல்லை
அதிமுக கட்சியில் பிளவு எதுவும் ஏற்படவில்லை. செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான்.
காலம் தான் முடிவு செய்யும்
எங்களை நம்பி வந்த ஓபிஎஸ், டிடிவி ஆகியோரைக் கைவிட்டுவிட்டதாக கேட்கிறீர்கள். அவர்களாகத்தான் வெளியே சென்றார்கள். மீண்டும் சேர்க்கப்படுவார்களா என்பதை காலம் தான் முடிவு செய்யும் என்றார் நயினார் நாகேந்திரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.