மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு வினாடிக்கு 55,000 கன அடியிலிருந்து 65,000 கனஅடியாக அதிகரிக்கப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 5 ஆவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாகவும் கர்நாடகா அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாகவும் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நள்ளிரவில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 55,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் நீர் வரத்து முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை மாலை மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 45,000 கனஅடி வீதம் வெளியேற்றப்பட்ட நிலையில், நள்ளிரவு முதல் வினாடிக்கு 55,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்படுகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணி முதல் 55,000 கன அடியிலிருந்து 65,000 கன அடியாக அதிகரிக்கப்படும். அணை மின் உற்பத்தி நிலையம் மற்றும் சுரங்கப்பாதை மின் உற்பத்தி நிலையம் வழியாக சுமார் 22,500 கன அடி தண்ணீரும், மீதமுள்ள நீர் உபரி நீர் போக்கிகள் வழியாகவும் வெளியேற்றப்படுகிறது. நீர் வெளியேற்றம் அதிகரிப்படுவதை அடுத்து முன்னெச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.