முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜை தொடங்கியது!

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை யாகசாலை பூஜை தொடங்கியது தொடர்பாக...

Updated On : 30 அக்டோபர், 2025 at 12:05 PM
சிதம்பரம் தில்லைகோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வியாழக்கிழமை காலை தொடங்கிய யாகசாலை பூஜை.
பகிர்:

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோபுரம், விமானங்களில் 21 கலசங்கள் புதன்கிழமை பொருத்தப்பட்ட நிலையில், வியாழக்கிழமை யாகசாலை பூஜை தொடங்கியது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்ளே சித்திரக்கூடம் என்றழைக்கப்படும் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் பக்தர்கள் ஒரே இடத்தில் நின்று சிவனையும், விஷ்ணுவையும் தரிசனம் செய்யலாம். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில். இங்கு மூலவர் கோவிந்தராஜர் அனந்த சயன கோலத்திலும், உற்சவரான தேவாதி தேவன் அமர்ந்த நிலையிலும் எழுந்தருளியுள்ளனர். மூலவர் சாத்விக விமானத்தின் கீழ் யோக சயனத்தில் உள்ளார். புண்டரீகவல்லி தாயார் சந்நிதி நிருத்த சபை அருகே தனியே ஒரு சுற்றுப் பிரகாரத்துடன் உள்ள கோயில் உள்ளது.

Advertisement

இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் வரும் நவம்பா் 3-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுவதையொட்டி, கோயிலின் விமானராஜ கோபுரங்கள், மகாமண்டபம் ஆகியவை 30 ஆண்டுகளுக்கு பிறகு புனரமைக்கப்பட்டது.

சிதம்பரம் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலையில் வைக்கப்பட்ட கும்பநீர் கலசங்கள்

புதன்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின. மேலும், கோயில் ராஜகோபுரம், கோவிந்தராஜ பெருமாள் கோயில் விமானம் மற்றும் புண்டரீகவள்ளி தாயாா், வேணுகோபாலா், நரசிம்மா், கருடா் சந்நிதிகளின் விமானங்களில் பூஜிக்கப்பட்ட 21 கலசங்கள் பொருத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபம் முன்பு உள்ள நடனப்பந்தலில் வியாழக்கிழமை காலை(அக்.30) யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலையில் புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டு விஷ்வக்சேன ஆராதனம், அகல்மஷ ஹோமம்ஸ பஞ்சகவ்யி பிராசனம் மற்றும் வாஸ்துசாந்தி, ரக்க்ஷாபந்தனம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.

கோயில் திருப்பணிக்கான ஏற்பாடுகளை புவனகிரி மாறன் கோவிந்தசாமி மற்றும் குடும்பத்தினா், கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவினா் ஜே.சுதா்சனன், ஆா்.சௌந்தரராஜன், டி.திருவேங்கடவன் மற்றும் பொதுதீட்சிதர்கள் ஆகியோா் செய்து வருகின்றனா்.

summary

Perumal Temple Kumbabhishekam: Yagasalai Pooja has begun

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.