முகப்பு
தற்போதைய செய்திகள்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த கடை உரிமையாளர்கள் மற்றும் மக்களிடம் வெள்ளிக்கிழமை(அக்.31) சிபிஐ அதிகாரிகள் விசாரணை...

Updated On : 31 அக்டோபர், 2025 at 6:57 AM
வேலுச்சாமிபுரlத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொள்ளும் சிபிஐ அதிகாரிகள்.
பகிர்:

கரூர்: கரூரில் செப். 27 ஆம் தேதி விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த கடை உரிமையாளர்கள் மற்றும் மக்களிடம் வெள்ளிக்கிழமை(அக்.31) சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர், 110 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஒரு நபர் ஆணையம் மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரட்டிருந்த நிலையில், அதனை ரத்து செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

இதையடுத்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகேஷ் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய 6 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் கடந்த 15 ஆம் தேதி கரூர் வந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணையை தொடங்கினர்.

சிறப்பு புலனாய்வுக் குழு ஐஜி அஸ்ராகர்க் தலைமையிலான சிறப்பு குழுவினர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கின் ஆவணங்கள் மற்றும் விசாரணை நிலை அறிக்கையை ஒப்படைத்தனர்.

வேலுச்சாமிபுரத்தில் மக்களிடம் விசாரணை மேற்கொள்ளும் சிபிஐ அதிகாரிகள்

பின்னர், மறுநாள் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் கடந்த 18 ஆம் தேதி கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் -2-ல் நீதிபதி சார்லஸ் ஆல்பட் முன்னிலையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் முதல் குற்றவாளியாக கரூர் மாவட்ட தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தாக்கல் செய்தனர். இந்த முதல் தகவல் அறிக்கை நகலை தவெக வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பெற்றுக் கொண்டனர்.

இதனிடையே நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் சிபிஐ அதிகாரிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில், ஏழு பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழுவினர் மீண்டும் வியாழக்கிழமை கரூர் வந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தங்கியிருந்த அவர்கள் அங்குள்ள பொதுப்பணித் துறையின் சுற்றுலா மாளிகைக்கு வந்தனர்.

இதையடுத்து முதன்முதலாக மெர்சல் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணிடம் வியாழக்கிழமை பிற்பகலில் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 9. 45 மணிக்கு வேலுச்சாமிபுரத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட சிபிஐ அதிகாரிகள், அங்குள்ள கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

CBI officials inspect Velusamypuram in Karur!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.