வணிக சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு!
வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் விலை புதன்கிழமை (ஏப். 1) ரூ. 203 உயர்ந்துள்ளது குறித்து...
புது தில்லி: மேற்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட உயர்வினைத் தொடர்ந்து, வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் விலை புதன்கிழமை (ஏப். 1) ரூ. 195.50 உயர்ந்துள்ளது. சென்னையில் ரூ. 203 உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நியச் செலாவணி மதிப்பைக் கணக்கில்கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி எரிபொருள் மற்றும் சிலிண்டர் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
மேற்கு ஆசிய போரின் காரணமாக எரிசக்தி விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் விலைகள் சுமார் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
அதன்படி, ஏப்ரல் பிப்ரவரி மாதத்தின் முதல் நாளான புதன்கிழமை (ஏப். 1) புதிய விலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை கடந்த மாதம் உயர்ந்திருந்த நிலையில், இந்த மாதம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ. 203 உயர்ந்து, புதிய விலையாக ரூ.2,246-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக சிலிண்டர் விலை தற்போது புதிய உச்சம் அடைந்துள்ளது. தில்லியில் ரூ. 195.50 உயந்து ரூ. 2,078.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மார்ச் 1-ஆம் தேதி, 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ. 114.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மாற்றமில்லாத வீட்டு உபயோக சிலிண்டர்
கடந்த மார்ச் 7-ஆம் தேதி, பொதுமக்கள் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டா் விலை ரூ. 60 உயர்த்தப்பட்ட நிலையில், இந்த மாதம் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சென்னையில் இதன் விலை ரூ.928.50-ஆகவும், தில்லியில் ரூ.913-ஆகவும் நீடிக்கிறது.
மாற்றமில்லாத பெட்ரோல் மற்றும் டீசல் விலை
பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையிலேயே தொடர்கிறது. தற்போது தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 94.72 ஆகவும், டீசல் விலை ரூ. 87.62 ஆகவும் உள்ளது.
மேற்கு ஆசிய போர் பதற்றம் காரணமாகவே எரிவாயு விலை உயா்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் உணவக உரிமையாளர்கள் மத்தியில் பெரும் கவைலை ஏற்பட்டுள்ளது.
வணிக சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் உணவகங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், உணவுகளின் விலை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.