குச்சனூர் சனீஸ்வரன் கோயிலில் திமுக எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் வாகனம் முற்றுகை!
குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் தேனி தொகுதி திமுக மக்களவை உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன் வாகனம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு...
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்த தேனி தொகுதி திமுக மக்களவை உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன் வாகனம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் ரூ. 2.82 கோடியில் பக்தர்கள் இளைப்பாறு மண்டபத்திற்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டு விழா காணொளி வாயிலாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தேனி தொகுதி திமுக மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது முன்னிலையில் வைத்தார்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியின் இடையே குச்சனூர் பேரூராட்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் எரியூட்டு மயானம் அமைக்கு பணியை நிறுத்தக்கோரியும், எங்கள் பகுதியில் எரியூட்டு மயானம் தேவையில்லை எனக்கூறி நிகழ்வு நடந்த கோயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல, எரியூட்டு மயானம் வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக குச்சனூர் கோயில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
அதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். மேலும், எதிர்ப்பாளர்கள் சிலர் எம்.பி., வாகனத்தை முற்றுகையிட்டதால் கோபமடைந்த தங்க தமிழ்ச்செல்வன் காரிலிருந்து இறங்கி பேச்சுவார்த்தை நடந்து முயன்றபோது இரு தரப்பினருக்கிடையே தள்ளுமுள்ளு, சலசலப்பு ஏற்பட்டது.
கோயில் வளாகத்தில் பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வால் கோயில் வளாகமே சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.