இஸ்ரேலுடனான போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் நீடித்து நிலைக்கும் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. சபைக்கு மாற்றாக "போர்டு ஆப் பீஸ்" என்ற புதிய சர்வதேச அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடங்கி உள்ள நிலையில், இந்த புதிய அமைப்பில் ரூ.9,000 கோடி ( 1 பில்லியன் டாலர்) கட்டணம் செலுத்தி இணையலாம் என்று அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சியால் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
போரால் பாதிக்கப்பட்ட காஸா நகரை மறுசீரமைப்பு செய்யும் பணிகளுக்காக கடந்த ஆண்டு செப்டம்பரில் காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு விரிவான திட்டத்தை நான் அறிவித்தேன். 20 அம்சங்களை கொண்ட அந்தத் திட்டத்தை அனைத்து உலகத் தலைவா்களும் ஏற்றுக்கொண்டனா். அவா்களில் அரபு நாடுகள், இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகளின் முக்கியத் தலைவா்களும் அடங்குவா். இந்தத் திட்டத்தில் உள்ள தொலைநோக்குப் பாா்வையை வரவேற்றும், அதற்கு ஒப்புதல் அளித்தும் கடந்த ஆண்டு நவம்பரில் தீா்மானம் ஒன்றை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலும் ஏற்றுக்கொண்டது.
இந்த முயற்சி காஸாவில் நீடித்து நிலைக்கும் அமைதியை ஏற்படுத்தும் உயரிய பொறுப்பைப் பகிர தனிச் சிறப்புமிக்க நாடுகளை ஒன்றிணைக்கும்.
புதிய சர்வதேச அமைப்பின் தலைவராக அதிபர் டிரம்ப் பொறுப்பேற்றுள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், அதிபர் டிரம்பின் மருமகன் ஜெராட் குஷ்னர், பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அப்போலோ குளோபல் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ரோவன், இந்திய வம்சாவளியை சேர்ந்த உலக வங்கி தலைவர் அஜய் பங்கா, அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ராபர்ட் கேப்ரியேல் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ரூ.9,000 கோடி கட்டணம்
புதிய சர்வதேச அமைப்பில் உலக நாடுகள் நிரந்தர உறுப்பினராக இணையலாம். இதற்கு தலா ரூ.9,000 கோடி(1 பில்லியன் டாலர்) கட்டணம் செலுத்த வேண்டும். இந்த புதிய அமைப்பு காஸாவின் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபடும் என்றும் இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் இணைவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையை கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச அமைதித் திட்டத்தைச் செயல்படுத்த காஸாவுக்காக "புதிய சர்வதேச அமைப்பை" நிறுவுவதற்கான தனது முடிவுக்கு, ஐ.நா.வின் திறமையின்மையே காரணம் என்று குற்றம்சாட்டினார்.
மோடிக்கு டிரம்ப் அழைப்பு
இஸ்ரேலுடனான போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் நீடித்து நிலைக்கும் அமைதியை ஏற்படுத்துவதற்கு பணியாற்றவுள்ள குழுவில் இணையுமாறு பிரதமா் மோடிக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இருப்பினும், 1 பில்லியன் டாலர்களை வழங்கும் நாடுகள் வாரியத்தில் நிரந்தர உறுப்பினராக சேரலாம். அதே சமயம் பணம் செலுத்தாத நாடுகள் மூன்று ஆண்டு காலத்திற்கு இதில் இணைந்திருக்கலாம்.
இந்த முயற்சி காஸாவில் நீடித்து நிலைக்கும் அமைதியை ஏற்படுத்தும் உயரிய பொறுப்பைப் பகிர தனிச் சிறப்புமிக்க நாடுகளை ஒன்றிணைக்கும் என்று தெரிவித்துள்ளாா்.
குறுக்கு வழி
இதுகுறித்து ஐ.நா. சபையின் மூத்த அதிகாரி டேனியல் போர்டி கூறும்போது, "உலக விவகாரங்களில் தலையிட அமெரிக்கா விரும்புகிறது. இதற்காக புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இது குறுக்கு வழி" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.