வெள்ளிக் கடையில் மிளகாய்ப் பொடி தூவி கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை
வெள்ளி நகைக் கடையில் இருந்த பெண் மீது மிளகாய்ப் பொடி தூவி, திருட முயன்ற தலைகவசம் அணிந்த மர்ம நபர் குறித்து...
சேலம்: வெள்ளி நகைக் கடையில் இருந்த பெண் மீது மிளகாய்ப் பொடி தூவி, திருட முயன்ற தலைகவசம் அணிந்த மர்ம நபர் குறித்து அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் சூரமங்கலம் அடுத்துள்ள சேலத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுமதி (40). இவர் தன் வீட்டின் ஒரு பகுதியில் ஶ்ரீ ஹரி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் வெள்ளி நகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 1 மணி அளவில் தலைகவசம் அணிந்து வந்த நபர் ஒருவர் கடைக்குள் அமர்ந்திருந்த சுமதி மீது மிளகாய்ப் பொடியை தூவி விட்டு கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மிளகாய்ப் பொடி எரிச்சல் தாங்க முடியாமல் சுமதி பயங்கரமாக கூச்சலிட்டுள்ளார்.
இதனால் பயந்துபோன தலைகவசம் அணிந்திருந்த அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பான சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ச்சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.