5 நாள்; 114 மணிநேர தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தை நிறைவு செய்த மமதா!
5 நாள்களாக நடத்தி வந்த உள்ளிருப்புப் போராட்டத்தை மமதா முடித்து வைத்தது குறித்து...
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி 5 நாள்கள், 114 மணிநேரங்கள் நடத்தி வந்த தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தை முடித்து வைத்தார்.
மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) முடிவு பெற்று இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த பிப். 28 ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
அந்தப் பட்டியலில் உயிரோடுள்ள வாக்காளர்கள் இறந்தவர்களாகக் குறிக்கப்பட்டுள்ளது என மமதா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நடைமுறையை எதிர்த்து உள்ளிருப்புப் போராட்டத்தை அறிவித்து, கொல்கத்தாவின் முக்கிய நகரமான தர்மதலாவில் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) முதல் கடந்த ஐந்து நாள்களாக மமதா போராட்டம் நடத்தி வருகிறார். மேலும், தேர்தல் ஆணையத்தால் இறந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்களை அந்தப் போராட்டக்களத்தில் முன்நிறுத்துவேன் என்றும் கூறியிருந்தார்.
மார்ச் 7 ஆம் தேதி போராட்டக்களத்தில் பேசிய மமதா, பாஜக நிர்வாகிகள் இந்த போராட்டம் நடைபெறும் இடத்தில் பாஜக தொடர்புடையத் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வருவதாகக் குற்றஞ்சாட்டினார். அவ்வாறு செய்பவர்களைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்குமாறு திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
மார்ச் 8, 9, 10 என போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த போராட்டம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அந்தக் கருத்துகளுக்கு மமதா பதிலும் கூறியிருந்தார். முதல்வர் பதவியில் இருந்தபோதும் ஒரு நாள் தவறாமல் போராட்டத்தில் நாளும் பங்கேற்றார்.
இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) முடிவுக்குக் கொண்டு வருமாறு வேண்டுகோள் விடுத்து அவர் கூறியதாவது:
“உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) நம்முடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த ஐந்து நாள்களாக நீங்கள் சாலையில் இருக்கிறீர்கள். இப்போது இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுங்கள் என்று அனைவரின் சார்பாகவும் நான் கட்சித்தலைவரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மமதா பானர்ஜியும் தனது போராட்டத்தை நிறைவு செய்து, “போராட்டம் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை; ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமை கிடைத்தால் மட்டுமே போராட்டம் முழுமை அடையும்” என்றும் கூறினார்.
இதனிடையே, மேற்கு வங்கத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், தகுதியுள்ள வாக்காளா்கள் யாருடைய பெயா்களும் நீக்கப்படாது எனத் இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.