என் மீது மட்டும் பல்வேறு வழக்குகள்; ஆனால், மமதா மீது இல்லை! ஏன்? பாஜகவுக்கு ராகுல் கேள்வி
மேற்கு வங்கத்தில் மக்களின் நலன்களுக்காக மாநில முதல்வர் மமதா பானர்ஜி எதுவும் செய்யவில்லை என ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தில் மக்களின் நலன்களுக்காக மாநில முதல்வர் மமதா பானர்ஜி எதுவும் செய்யவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் காங்கிரஸின் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது, "நரேந்திர மோடி அரசு, எனக்கு எதிராக பல வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி மீது இல்லை. ஏனெனில், அவர் நேரடியாக பாஜகவை எதிர்த்துப் போராடவில்லை.
தொடர்ந்து 5 நாள்களில் 55 மணிநேரம் அமலாக்க இயக்குநரகம் என்னிடம் விசாரணை மேற்கொண்டது. மமதா பானர்ஜி எத்தனை மணிநேரம் விசாரிக்கப்பட்டார்? அவருக்கு எதிராக அமலாக்கத் துறை அல்லது சிபிஐ விசாரணை எதுவுமில்லை. அவர் (மமதா) நேரடியாக பாஜகவை எதிர்த்துப் போராடாததால்தான்.
Advertisement
என் வீடு பறிக்கப்பட்டது. எனது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. எனக்கு எதிராக 36 வழக்குகள் உள்ளன. நரேந்திர மோடியால், மமதா மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?
காங்கிரஸ் மட்டுமே பாஜகவை கருத்தியல் அடிப்படையில் எதிர்கொள்கிறது. என்னையும் கார்கே மற்றும் பிறரையும் மோடி 24 மணிநேரமும் தாக்குகிறார்.
ஆனால், தேர்தலின்போது மட்டுமே மமதாவை பிரதமர் தாக்குகிறார். தேர்தல் முடியட்டும்; மமதாவுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட மோடி பேச மாட்டார்.
பாஜக, ஆர்எஸ்எஸ்-ஸின் சித்தாந்தத்தை காங்கிரஸ் மட்டுமே தோற்கடிக்க முடியும்; திரிணமூல் காங்கிரஸ் அல்ல என்பது மோடிக்கு தெரியும்.
மேற்கு வங்கத்தில் வேலைவாய்ப்பைப் பெற திரிணமூல் காங்கிரஸில் யாரேனும் ஓர் உறவினராவது இருக்க வேண்டும். இல்லையெனில், அவருக்கு எதுவும் கிடைக்காது. தனது கட்சியினரின் நலனுக்காக மட்டுமே மமதா பானர்ஜி செயல்படுகிறார்.
மக்களின் நலனுக்காகவும் வருவாயை ஈட்டவும் மமதா எதுவும் செய்யவில்லை.
மேற்கு வங்கம், நாட்டின் தொழிற்துறை மையமாக இருந்தது. ஆனால், முதலில் இடது முன்னணியும் பின்னர் திரிணமூல் காங்கிரஸும் அவை எல்லாவற்றையும் அழித்து விட்டன.
5 லட்சம் வேலைவாய்ப்புகளை அளிப்பதாக 2021-ல் மமதா உறுதியளித்திருந்தார். ஆனால், யாருக்காவது வேலை கிடைத்ததா? மாநிலத்தில் வேலையின்மை கொடுப்பனவுக்காக 84 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அவர், மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கான பாதையை வழிவகுக்கிறார். அவர் மக்களின் நலன்களுக்காக பணியாற்றியிருந்தால், பாஜகவால் மாநிலத்தில் ஊடுருவியிருக்க முடியாது" என்று தெரிவித்தார்.