அழகே அழகு

பொம்முக் குட்டிகளுக்குப் பொருத்தமான பொம்மைத் தோடுகள்!

இந்த குட்டிக் குட்டித் தோடுகள் விலையும் குறைவாகத் தான் தோன்றுகிறது. இவற்றை அணிந்து கொள்ளும் குட்டி தேவதைகளின் சிரிப்பில் இந்த பூமி  ஒளி பெறட்டும்.                 

கார்த்திகா வாசுதேவன்

தென்னிந்தியாவில் குழந்தை பிறப்பதே பெரிய கோலாகலமான நிகழ்வு தான். ஆனாலும் குழந்தை பிறந்து ஏழு அல்லது ஒன்பதாம் மாதத்தில் அதற்கு முடி இறக்கி காது குத்தும் வைபவம் இருக்கிறதே அது அதை விட கோலாகலமான நிகழ்வு. இந்த மாபெரும் விழாவில் குழந்தை தான் ஹீரோ அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி உட்பட  மற்றவர்கள் அனைவரும் கேரக்டர் ஆர்டிஸ்டுகள்.

எதற்காக இப்படிச் சொல்வதென்றால் முடி இறக்கும் போதும் காது குத்தும் போதும் குழந்தை பிடித்து வைத்த பிள்ளையார் பொம்மை போல ஆடாது அசையாது அப்படியே உட்கார்ந்திருக்க போவதில்லை. அது தன் பாட்டில் கத்தி கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டிக் கொண்டிருக்கும். அதற்காக அப்படியே விட்டு விட முடியுமா? சூட்டோடு சூடாக அடுத்த ஸ்டெப் காது குத்தியாக வேண்டுமே!

அந்த நேரத்தில் தான் நாம் கேரக்டர் ஆர்டிஸ்டுகளின் முக்கியத்துவத்தை துல்லியமாக உணர முடியும். ஆளாளுக்கு குழந்தையை சமாதானப் படுத்துகிறேன் என்ற பெயரில் கது குத்தும் போது அதன் வாயில் வாழைப்பழத்தை திணிப்பது, சாக்லேட்டைத் திணிப்பது என்றெல்லாம் அடாவடி செய்து குழந்தையின் பயத்தை மேலும் தூண்டுவார்கள், ஒரு மூச்சு அழுது ஓய்ந்ததும் குழந்தைக்கு மாமன் சீர், அத்தை சீர், ஆட்டுக்குட்டி சீர், கழுதைக் குட்டி சீர் செய்கிறோம் என்ற பெயரில் இன்னொரு களேபரத்துக்கு அஸ்திவாரம் போடுவார்கள். அதற்குள் குழந்தை அசந்து போய் தூங்கி விடும்.

அதெல்லாம் ஒரு காலம்! இப்போது முடி இறக்குவதும் சரி காது குத்துவதும் சரி தனது பழைய செல்வாக்கினை இழந்து புது பரிணாமத்தை அடைந்திருக்கிறது. உறவுகள் சூழ நடத்தப்பட்ட விழாக்கள் இப்போது அம்மா, அப்பா, குழந்தை தவிர சந்தர்பம் அமைந்தால் தாய்மாமன், தாத்தா, பாட்டிகள் மட்டும் போதும் என்றாகி விட்டது. அதிலும் முடி இறக்குவது கோயிலில் காது குத்துவது ஹாஸ்பிடலில் டாக்டரிடம் என்று புதிதாக ஒரு வழக்கம் பரவலாகி வருகிறது.


இன்னொரு ஆப்சனும் உண்டு இப்போது பிரபல நகைக்கடைகளில் காதோடு சேர்த்து சைட் காது, மூக்குத்தி என்றும் குத்திக் கொள்ளும் வசதி வந்து விட்டது. அள்ளித் தெளித்த அவசரக் கோலம் போலான வாழ்வில் இப்படித்தான் முடியுமென்றால் பரவாயில்லை அதனாலென்ன? இப்படிச் செய்வது சரியா? தவறா? என்ற ஆராய்ச்சிக்குப் போவதை விட நாம் நமது உறவுகளின் இணைப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வாய்ப்பை அறியாது தடுத்தவாறு செல்கிறோம் என்பதை உணர்ந்தால் போதும். சரி தத்துவ விசாரம் வேண்டாம் சொல்ல வந்த விசயத்தைப் பற்றிப் பேசலாம்.

பழைய நாட்களைப் போல் கோயிலில் காதுகுத்தினாலும் சரி இன்றைய நாட்களைப் போல டாக்டரிடமோ அல்லது நகைக்கடைகளிலோ காது குத்தினாலும் சரி சில விசயங்களில் தவறாது கவனம் செலுத்தினால் ஒரு முறைக்கு மேல் குத்திய காதையே மூன்று நான்கு முறைகள் மாற்றி மாற்றி குத்தும் அவஸ்தையில் இருந்து குழந்தையைக் காப்பாற்றலாம்.

குழந்தைகளுக்கு காது குத்தும் போதும் / குத்திய பின்னும் கவனிக்க வேண்டிய விசயங்கள்:

  • குழந்தைக்கு தேர்ந்தெடுக்கப் போகும் தோடுகளின் தண்டுகள் சிறியதாக இருப்பது நல்லது. நீளமான தண்டாக இருந்தால் முடியில் சிக்கி அடிக்கடி குழந்தைக்கு தொல்லையாக இருக்கும். குழந்தையை தூக்கி பெரியவர்கள் கொஞ்சும் போது அவர்களது உடைகளில் தலைமுடியில் குழந்தையின் தோடு சிக்கிக் கொண்டு குழந்தை வீறிட்டு அழும்படியாக நேர்ந்து விடும்.
  • தோடு, பேபி செயின், மோதிரம், அரைஞாண் கயிறு என்று குழந்தைகளுக்காக எந்த நகையைத் தேர்ந்தெடுத்தாலும் அவற்றில் கற்களோ, முத்துக்களோ, இனாமலோ இல்லாமல் பிளெயினாக இருக்கும் படி பார்த்து வாங்க வேண்டும். எந்தப் பொருளாக இருந்தாலும் அவற்றை வாயில் வைக்கும் பழக்கம் பெரும்பாலான குழந்தைகளுக்கு இருப்பதால் அதனால் புதிதாக பிரச்சினகள் வரக்கூடும்.
  • டாக்டர்களிடம் காது குத்திக் கொள்வதென்றால் குழந்தைக்கு அணிவிக்கப் போகும் தோடுகளை வாங்கி சோதித்துப் பார்த்த பின் தேர்வு செய்வதே நல்லது. சில தோடுகள் அளவில் மிக மிகச் சிறியவையாகவும் பின்புற தண்டுகள் கூர்மையாகவும் அமைந்து விட்டால் குழந்தைக்கு அதை விட சவுகரியக் குறைப்பாடு வேறில்லை.
  • எந்த முறையில் காது குத்தினாலும் இரவில் குழந்தை தூங்கியதும் காது குத்திய இடத்தில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு ஆன்ட்டி பயோடிக் ஆயின்மெண்டுகளை தடவ மறக்க கூடாது.
  • தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக காது குத்திய இடத்தில் ரத்தக் கசிவோ சீழ் கசிவோ இருந்தால் உடனடியாக தோடுகளைக் கழட்டி காது துளைகளை இளம் சூடான வெந்நீரில் கழுவி கற்றோட்டமாக காய வைத்து ஆயின்மெண்ட் தடவி புண் ஆறிய பின் மறுபடி தோடுகளை மாட்டி விடலாம்.
  • குழந்தைகளுக்கு தேர்ந்தெடுக்கும் போது எதிர்கால உத்தேசத்தில் புத்திசாலித் தனமாக முடிவெடுப்பதாக நினைத்துக் கொண்டு அம்மாக்களும் அணிந்து கொள்ளத் தக்க வகையில் பெரிய அகலமான தோடுகளை வாங்கவே கூடாது. குழந்தைகளுக்க்கென்றே அழகழகாக பொருத்தமான மாதிரிகளில் வடிவமைக்கப்பட்ட  சின்னஞ்சிறு தோடுகளின் அணிவகுப்பை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. அவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். இந்த வகை தோடுகளை குழந்தைகள் பள்ளி இறுதி வகுப்புகள் வரை கூட அணிந்து செல்ல முடியும் என்பதால் அடிக்கடி தோடுகளை மாற்றும் அவஸ்தையும் குறையும்.

குழந்தைகளுக்கான பிரத்யேக தோடு டிஸைன்கள்:


  
குழந்தைகளுக்கான தோடு டிஸைன்களில் அபார கற்பனை வளம் நிரம்பி வழிகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆப்பிள், டெடி பியர், பட்டர் ஃபிளை, பூனைக்குட்டி, ராஜாவின் கிரீடம், குட்டி யானை,லேடி பக்ஸ், லவ் பேர்ட்ஸ், ஸ்டார், புத்தா, கிருஷ்ண பாதம் என்று எத்தனை எத்தனை அழகழகான  டிஸைன்கள். கண்ணுக்கும் மனதிற்கும் நிறைவான இந்த குட்டிக் குட்டித் தோடுகள் விலையும் குறைவாகத் தான் தோன்றுகிறது. இவற்றை அணிந்து கொள்ளும் குட்டி தேவதைகளின் சிரிப்பில் இந்த பூமி  ஒளி பெறட்டும்.                                        

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT