முகப்பு
செய்திகள்

ராஜினாமா செய்த பின்னர் கடைசி நாள் வேலைக்கு குதிரையில் அலுவலகம் சென்ற ஐடி இளைஞர்!

பெங்களூருவில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்தார் ரூப்பேஷ் குமார் வர்மா.

Updated On : 19 ஜூன், 2018 at 3:03 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:29 PM

பெங்களூருவில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்தார் ரூப்பேஷ் குமார் வர்மா. இவரது சொந்த ஊர் ராஜஸ்தான். வேலைக்காக சொந்த ஊரைவிட்டு பெங்களூருவில் வசித்து வருகிறார். அவர் குடியிருக்கும் பகுதியிலிருந்து அலுவலகம் செல்ல 8 கிலோ மீட்டர் தூரம் தினமும் பயணம் செய்ய வேண்டும். ஆனால் பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் அவரால் அத்தனை சுலபமாக தன் ஆபிஸுக்கு சரியான நேரத்துக்குப் போக முடியாமல் தவித்தார். தினமும் குறைந்தது மூன்று மணி நேரம் ட்ராஃபிக்கில் சிக்கி அலுவலகம் வந்து சேர்வதே பெரும் பிரயத்தனமானது. ஒவ்வொரு சிக்னல்கள் மற்றும் ட்ராபிக் ஜாம் ஆகும் இடங்களில் எல்லாம் குறைந்தது அரை மணி நேரமாவது காத்திருக்கும் நிலைக்கு ஆளானார் ரூப்பேஷ்.

இந்நிலையில் நாளுக்கு நாள் அவருக்கு ஸ்ட்ரெஸ் அதிகரிக்கவே ஒரு கட்டத்தில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். சொந்தமாக ஒரு சிறிய நிறுவனம் ஒன்றைத் தொடங்க முடிவெடுத்துள்ளார். தன்னுடைய கடைசி வேலை நாளில் (கடந்த வாரம் வெள்ளிக்கிழமை) அலுவலகத்துக்கு தன்னுடைய பைக்கில் செல்லாமல், குதிரை ஒன்றில் ஏறிச் சென்றார். லாப்டாப் சகிதம், தோளில் மாட்டிய ஒரு பதாகையுடன் (சாஃப்ட்வேர் இன்ஜினியராக இன்றே என் கடைசி நாள் வேலை) ஜம்மென்று ரிங் ரோட்டைக் கடந்து குதிரையில் பயணித்தார் ரூப்பேஷ்.

அவரது இந்த குதிரை சவாரியை அப்பகுதி மக்கள் மற்றும் சக ஊழியர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரூப்பேஷை உற்சாகப்படுத்தினர். அவருடன் செல்ஃபி எடுத்து குதிரையுடன் அவர் வலம் வந்த காட்சியையும் படம் பிடித்து சமூக வளத்தலங்களில் வைரலாக்கினர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.