முகப்பு
செய்திகள்

குழந்தைகள் வாயிலாக அறிவுரை சொல்லும் இத்தகைய விடியோக்கள் தேவை தானா?

‘குவாட்டர் அடிக்காம நியூ இயர் கொண்டாடுங்க’ என்று அந்தப் பையனைப் பேசவைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.. ‘பிஞ்சு வயதில் குவாட்டர் மேட்டர் பேச வைப்பதையெல்லாம் எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்?

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

இரு நாட்களுக்கு முன்பு நெல்லையைச் சேர்ந்த 4 வயதுச் சிறுவனை மையமாக வைத்து வெளிவந்த ‘சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா?’ என்ற விடியோ யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்கும் அளவுக்கு அதிகமான மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டது. ஓரிரு மாதங்களுக்கு முன்பு இதே விதமாக சிறுமியொருத்தி சேட்டை பண்ணா குழந்தைகளை அடிக்கக் கூடாது, குணமா எடுத்துச் சொல்லனும் என்று அறிவுரை பகர்ந்த காட்சியொன்று இதைக்காட்டிலும் வைரலாகி இணையத்தில் ஹிட் அடித்தது. இந்த இரண்டு விடியோக்கள் மட்டுமல்ல இதே போல குழந்தைகளை, பெரியவர்களுக்கு அறிவுரை சொல்லும் விதத்திலோ அல்லது நகைச்சுவையாகவோ பேச வைத்து விடியோ எடுத்து அதை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூபில் பகிரும் பழக்கம் நம் மக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

சில சமயங்களில் குழந்தைகள் தற்செயலாக பெரியவர்களைப் போல சிந்தித்து மிகுந்த மனமுதிர்ச்சியுடன் பேசுவது வாடிக்கை தான் என்றாலும் இன்றைய காலகட்டத்தில் சிலமணி நேர புகழ் வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு பெற்றோரே தங்களது குழந்தைகளை இப்படியெல்லாம் பெரியமனிதத் தனத்துடன் பேச வைத்து இணையத்தில் பகிர்வதும் நடக்கிறது. இது நிச்சயம் ஆரோக்யமானது இல்லை. ஏனெனில் நெல்லை சிறுவன் விடியோவின் கீழ் இடப்பட்டிருந்த கருத்துரையொன்றால் தெரிய வந்த விஷயம் என்னவெனில்... அச்சிறுவனின் பெற்றோர் அவனை மையமாக வைத்து வெளியிட்டிருக்கும் மற்றொரு விடியோவொன்றில்;

‘குவாட்டர் அடிக்காம நியூ இயர் கொண்டாடுங்க’ என்று அந்தப் பையனைப் பேசவைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.. ‘பிஞ்சு வயதில் குவாட்டர் மேட்டர் பேச வைப்பதையெல்லாம் எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்?’ என்று அங்கு ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

Advertisement

இன்றைய கணினியுகத்தில் சகல விதத்திலும் சின்னஞ்சிறுவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் வீண் பெருமைக்காகவும் சில மணிநேரப் புகழ்ச்சிக்காகவும் மனம் மயங்கி பெற்றோரே இப்படியான விளம்பர மோகத்தில் வீழ்ந்து தங்களது குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் எதிர்கால வாழ்வுக்கும் குழி பறிக்கலாமா?

இன்றைக்கு கையில் ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவர்கள் எல்லோருமே ஊடகவியலாளர்கள் ஆகிவிடுகிறார்கள். ஊடகத்தில் ஒரு செய்தி அல்லது காணொளியைப் பதிவு செய்யும் முன்பு அதன் முக்கியத்துவம் குறித்து சற்றேனும் ஆராய வேண்டும். இது தேவையா? தேவையற்றதா? என்ற தெளிவு வேண்டும். தெளிவில்லாத பட்சத்தில் இப்படியான விடியோக்கள் ட்ரெண்டிங் ஆவதில் வியப்பதற்கு எதுவுமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments