'மனநல ஆரோக்கியத்துக்கு இயற்கை அவசியம்'
ஒருவரின் வீட்டைச் சுற்றியுள்ள இயற்கையானது கரோனா தொற்றுநோயால் ஏற்படக்கூடிய எதிர்மறையான மனநல பாதிப்புகளைக் குறைக்கும்
ஒருவரின் வீட்டைச் சுற்றியுள்ள இயற்கையானது கரோனா தொற்றுநோயால் ஏற்படக்கூடிய எதிர்மறையான மனநல பாதிப்புகளைக் குறைக்கும் என சுற்றுச்சூழல் பயன்பாடுகள் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு பரிந்துரைக்கிறது.
ஜப்பானின் டோக்கியோவில் மூத்த குடிமக்கள் 3,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன.
இதன்படி ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஒரு கேள்வித்தாள் வழங்கப்பட்டு அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கக் கோரப்பட்டது. இதில், மனநிலை தொடர்பான 5 தன்மைகளுக்கும், அவர்களை சுற்றியுள்ள இயற்கைக்கும் இடையேயான தொடர்பு குறித்து கேள்விகள் இருந்தன.
தொடர்ந்து ஆய்வின் முடிவில், மனச்சோர்வு, வாழ்க்கை திருப்தி, சுயமகிழ்ச்சி, சுயமரியாதை மற்றும் தனிமை ஆகியவற்றுடன் பசுமை இடங்களின் பயன்பாடுகளுக்கும், வீட்டிலிருந்து ஜன்னல்கள் வழியாக காணும் பசுமை படர்ந்த இடங்களுக்கும் தொடர்பு உள்ளது என கண்டறியப்பட்டது.
டோக்கியோ பல்கலைக்கழகத்தின் முன்னணி எழுத்தாளர் மசாஷி சோகா கூறுகையில், 'நமக்கு அருகிலுள்ள இயற்கையானது மன அழுத்தத்தின் தாக்கங்களை குறைப்பதில் முக்கிய பங்காற்றும்.
நகர்ப்புறங்களிலும் இயற்கை சூழல்களைப் பாதுகாப்பது உயிரினங்களின் பாதுகாப்பிற்கு மட்டுமின்றி, மனித ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் முக்கியமானது' என்று தெரிவித்தார்.