முகப்பு
செய்திகள்

'கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள உடல் எடையை குறையுங்கள்'

கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள உடல் எடையை குறையுங்கள் என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். 

Updated On : 18 செப்டம்பர், 2020 at 1:42 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:52 PM

கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள உடல் எடையை குறையுங்கள் என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். 

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் உடல் பருமன் அதிகரிக்கிறது. அதிக உடல் பருமன் கொண்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்படுவது அதிகமாக இருக்கிறது என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 

உடல் பருமனாக இருப்பது பல்வேறு உடல் நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்றும் உடல் பருமன் கொண்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது இரட்டிப்பாகிறது என்றும் இதனால் உடல் எடையை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர். 

Advertisement

தற்போது கரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதால், உடல் பருமன் உடைய இளம் வயதினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். 

நாடு முழுவதும் உள்ள தரவுகளின் அடிப்படையில் உடல் பருமன் கொண்ட இளம் வயதினர் அதிகமாக கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும், மேலும் இதில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், 'முன்னதாக வயதானவர்களுக்கு வென்டிலேட்டர் தேவைப்பட்ட  நிலையில், தற்போது இளம்வயதினர் பலருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படுகிறது. அவ்வாறு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள், வென்டிலேட்டர் உதவி தேவைப்படுபவர்கள் பெரும்பாலானோர் உடல் பருமன் கொண்டவர்களாக இருக்கிறார்கள்' என்று தெரிவித்தார். 

கேரள மாநில சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் பிபின் கோபால் இதுகுறித்து, 'உடல் பருமன் பிரச்னை தற்போது இளம் தலைமுறையினரிடையே அதிகம் காணப்படுகிறது. கரோனா வைரஸின் தீவிரத்தை அதிகப்படுத்தக்கூடிய காரணிகளில் உடல் பருமனும் ஒன்றாகும்' என்றார்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகையில், 'அதிகப்படியான உடல் எடை நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவு உள்ளிட்டவைகளுக்கு காரணமாகலாம். மேற்குறிப்பிட்ட காரணங்களால் உடல் பருமன் கொண்டவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று எளிதில் ஏற்படலாம்' என்று தெரிவித்தார். 

முன்னதாக, இங்கிலாந்தில் உள்ள சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறை நிறுவனமான பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து, அதிக எடை கொண்டவர்களுக்கு மருத்துவமனை உதவி அதிகம் தேவைப்படுகிறது, உடல் பருமனுடையவர்கள் இரு மடங்கு அதிகமாக சுமார் 74 சதவிகிதம் பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்படுவதாகவும், அவர்கள் கரோனாவால் இறக்கும் அபாயமும் அதிகம் இருப்பதாகவும் கூறியுள்ளது.

எனவே, ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. உடல் எடையை சீராக வைத்திருப்பதன் மூலம் இதுபோன்ற வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.