அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால் ஞாபகமறதி ஏற்படும் அபாயம் குறைவு என்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு.
மாறிவரும் உணவு பழக்கவழக்கங்களால்தான் இன்று உடல்நலப் பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன. சத்தான உணவுகளைச் சாப்பிட்டால் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
இந்நிலையில் உணவு முறைகளுக்கும் மனிதனின் ஞாபகசக்திக்கும் இடையேயான தொடர்பு குறித்து ஜப்பான் ஆய்வாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால் டிமென்ஷியா எனும் ஞாபகமறதி ஏற்படும் அபாயம் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.
'சிறந்த ஆரோக்கியத்திற்கு ஒவ்வொரு உணவியல் நிபுணரும் பரிந்துரைக்கும் ஒன்று நார்ச்சத்து. ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு இது மிகவும் முக்கியமானது. கொழுப்பு குறைவாக இருப்பதால் தேவையற்ற உடல்நலப் பிரச்னைகளைத் தடுக்கும். உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய் ஆகியவற்றைத் தடுக்கும்.
இத்துடன் மூளையின் சிறப்பான செயல்பாடுகளுக்கும் நார்ச்சத்து உதவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நார்ச்சத்துள்ள உணவுப்பொருள்கள் அதிகம் சாப்பிடும் ஒருவருக்கு டிமென்ஷியா எனும் ஞாபகமறதி ஏற்படும் அபாயம் குறைவு என்பது ஆய்வின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிக நார்ச்சத்து கொண்ட ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம், டிமென்ஷியா ஏற்படுவதைக் குறைக்க முடியும்' என்று முதன்மை ஆய்வாளர் கசுமாசா யமகிஷி கூறினார்.
இந்த ஆய்வின் முடிவுகள் 'நியூட்ரிஷனல் நியூரோ சயின்ஸ்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | 'டயட்'டில் இருப்பவரா நீங்கள்? இந்த உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்!