முகப்பு
மக்களைவைத் தேர்தல் 2019

கவர்ச்சிகரமான தேர்தல் அறிவிப்புகள்: விதிகளைபின்பற்றியதா அரசியல் கட்சிகள்?

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களது கொள்கைகளின் அடிப்படையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. தேர்தல்களை நடத்துவதற்காக

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:08 AM
பகிர்:


தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களது கொள்கைகளின் அடிப்படையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. தேர்தல்களை நடத்துவதற்காக மட்டும் விதிகளை தேர்தல் ஆணையம் வகுத்திருந்த காலம் போய், தற்போது தேர்தல் அறிக்கைகளைத் தயார் செய்யவும் அரசியல் கட்சிகளுக்கு விதிகளை வகுத்துத் தந்துள்ளது ஆணையம்.
கடந்த 2008-ஆம் ஆண்டு சுப்ரமணியம் பாலாஜி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், கடந்த 2013-ஆம் ஆண்டில் தேர்தல் அறிக்கைகளைத் தயாரிப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை ஆணையம் வகுத்தது. அதன் விவரம்:
தேர்தல் அறிக்கைகளில் அரசமைப்புச் சட்டத்தின் நோக்கங்களுக்கும், கொள்கைகளுக்கும் எதிராக எதுவும் இடம்பெறக்கூடாது. மேலும், தேர்தல் நடத்தை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள பிற விதிகளுக்கு உள்பட்டும் இருக்க வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள், மாநிலங்கள் மக்களுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களை வகுக்க வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளது. எனவே, அதுபோன்ற நலத் திட்டங்கள் குறித்த வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறுவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனாலும், தேர்தல் நடவடிக்கைகளின் தூய்மையைக் கெடுக்கும் வகையிலோ, வாக்காளர்களைக் கவரும் வகையிலோ,  வாக்குறுதிகள் அளிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
அரசியல் கட்சிகள் சார்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் நியாயமானவையாக இருப்பதுடன், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதி ஆதாரங்களைப் பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளும் விரிவாக விளக்கப்பட்டு ஒளிவுமறைவற்ற தன்மை, நடுநிலைத் தன்மை, வாக்குறுதிகளின் நம்பகத்தன்மை ஆகியன உறுதி செய்யப்பட வேண்டும். நிறைவேற்றப்படக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வாக்காளர்களின் நம்பிக்கையைக் கோர வேண்டும் என தேர்தல் அறிக்கைகளுக்கு விதிகளை வகுத்துத் தந்துள்ளது தேர்தல்ஆணையம்.
ஏழைகளுக்கு ரூ.1,500, அனைத்து விவசாயிகளின் கடன்களும் ரத்து, கல்விக் கடன் ரத்து.... என அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நீள்கின்றன. எனவே, இந்த வாக்குறுதிகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் விதிகளைப் பின்பற்றி அரசியல் கட்சிகள் தயாரித்ததா என்பதே மில்லியன் டாலர் கேள்விதான். 

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.