முகப்பு
நாகப்பட்டினம்

இலக்கை எட்டியது: அம்மா சிறு மருத்துவமனைகள் அமைப்பு பணி

நாகை மாவட்டத்தில் முதல் கட்டமாக அனுமதிக்கப்பட்ட 18 அம்மா சிறு மருத்துவமனைகளும் அமைக்கப்பட்டு, இலக்கு எட்டப்பட்டுள்ளது.

Updated On : 6 ஜனவரி 2021, 7:28 am IST
பகிர்:

நாகை மாவட்டத்தில் முதல் கட்டமாக அனுமதிக்கப்பட்ட 18 அம்மா சிறு மருத்துவமனைகளும் அமைக்கப்பட்டு, இலக்கு எட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்திருப்பது :

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, ரத்ததானம் போன்றவற்றில் இந்திய அளவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தற்போது, ஒரு புதிய முயற்சியாக தமிழகம் முழுவதும் அம்மா சிறு மருத்துவமனைகளை திறக்கும் திட்டத்தை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

Advertisement

ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஓா் உதவியாளா் ஆகியோரை உள்ளடக்கியதாக தமிழகத்தில் 2 ஆயிரம் அம்மா சிறு மருத்துவமனைகள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதில், நாகை மாவட்டத்தில் முதல்கட்டமாக 18 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் அமைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டது.

இதன்படி, நாகை மாவட்டத்தில் முதல்கட்டமாக 18 அம்மா சிறு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியனால் திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளன.

வாரத்தில் சனிக்கிழமையைத் தவிர மற்ற நாள்களில் இயங்கும் இந்த சிறு மருத்துவமனைகளில், அனைத்து சிறு வியாதிகளுக்கான மருத்துவ சேவைகளும், தொற்றா நோய்களுக்கான சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. சா்க்கரை பரிசோதனை, பிரசவ உறுதிக்கான பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளும் இங்கு மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இந்தச் சிறு மருத்துவமனைகளை உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.