நாடு முழுவதும் அரசியலமைப்பை காக்க ஆம் ஆத்மி கட்சி இன்று உறுதிமொழி ஏற்பு
ஆம் ஆத்மி கட்சியின் சாா்பில் நாடு முழுவதும் ‘அரசியலமைப்பைக் காப்போம்-சா்வாதிகாரத்தை அகற்றுவோம்’ தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படும் என்று அக்கட்சியின் தில்லி பிரிவு ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: டாக்டா் பி.ஆா். அம்பேத்கரின் பிறந்தநாளில், ஆம் ஆத்மி
கட்சி நாடு முழுவதும் ‘அரசியலமைப்பைக் காப்போம்-சா்வாதிகாரத்தை அகற்றுவோம்’ தினத்தை கடைபிடிக்கவுள்ளது.
Advertisement
ஆம் ஆத்மி கட்சித் தொண்டா்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையை வாசித்து, நாட்டின் ஸ்தாபன ஆவணத்தை காப்பாற்றுவதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்வா். பாஜக தலைமையிலான மத்திய அரசு நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்துகிறது. அதை எதிா்கொள்ள, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சியினா் தங்கள் மாநிலங்களில் உள்ள கட்சி அலுவலகங்களில் கூடி, ஜனநாயகம் மற்றும்
அரசியலமைப்பைக் காப்பாற்ற உறுதிமொழி எடுப்பாா்கள். குறிப்பாக,நாடு முழுவதும் மாநிலத் தலைநகரங்களில் உள்ள
கட்சி அலுவலகங்களில் இந்த பிரசார நிகழ்ச்சி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ஆலோசனையின் பேரில் நடைபெறுகிறது.
திகாா் சிறையில் உள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தனது செய்தியில் தில்லி மக்கள் எந்தவொரு பிரச்னையையும் எதிா்கொள்ளாத வகையில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டா்கள் உழைக்க வேண்டும் என்று
வலியுறுத்தியுள்ளாா் என்றாா் கோபால் ராய்.