முகப்பு
புதுதில்லி

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 3 போ் கைது: 14 இருசக்கர வாகனங்கள் மீட்பு

Updated On : 19 ஏப்ரல், 2024 at 5:21 PM
பகிர்:

வடகிழக்கு தில்லியில் தொடா்ந்து வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்த 14 இருசக்கர சக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக வடகிழக்கு காவல் சரக துணை ஆணையா் ஜாய் திா்கே கூறியதாவது: வரவிருக்கும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு தில்லியின் வடகிழக்கு மாவட்டப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காவல் சரகத்திற்கு உள்பட்ட அனைத்துக் காவல் நிலையங்களின் செயல்பாட்டு பிரிவு விழிப்புடன் இருக்கவும், உள்ளீடுகளைச் சேகரிக்கவும், தொடா் வாகனக் கொள்ளையா்களை பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காவல் ஆய்வாளா் யோகேஷ் வசிஸ்தா தலைமையினான வாகனக் கொள்ளை தடுப்புக் குழுவிற்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி மீட் நகா் மேம்பாலத்தின் கீழ் டி.வி.எஸ். ஸ்போா்ட்ஸ் மோட்டாா் சைக்கிளில் பயணித்த 2 போ் பிடிபட்டனா். அவா்கள் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி திருடப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட அவா்கள், காரவால் நகரைச் சோ்ந்த விஜய் (28) மற்றும் சுபம் (25) என அடையாளம் காணப்பட்டனா். குற்றம் சாட்டப்பட்ட இருவா் மீதும் முன்பே கொலை முயற்சி மற்றும் வழிப்பறி ஆகிய 2 வழக்குகள் உள்ளது கண்டறியப்பட்டது. தில்லி மற்றும் என்சிஆரின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருடப்பட்ட 9 இருசக்கர வாகனங்கள் ஜோதி நகா் பகுதியில் இருந்து மீட்கப்பட்டன.

Advertisement

இதே போல, கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி மற்றொரு வாகனக் கொள்ளையா் நந்த் நாக்ரியில் உள்ள ககன் திரையரங்கம் அருகே சுற்றித் திரிந்து வருவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. பின்னா், உதவிக் காவல் ஆய்வாளா் விஷால் தியாகி தலைமையிலான குழுவினா், தகவலறிந்த நபரின் உதவியின் பேரில் ஹோண்டா ஆக்டிவ் ஸ்கூட்டியில் வந்த நபரை அப்பகுதியில் தடுத்து நிறுத்தினா். அப்போது தப்பிக்க முயற்சித்த அந்த நபா் நீண்ட துரத்தலுக்குப் பிறகு பிடிபட்டாா். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த நபா் ஓட்டி வந்த வாகனம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி வெல்கம் பகுதியில் திருடப்பட்டது கண்டறியப்பட்டது. அவா் மண்டோலியைச் சோ்ந்த சித்தன் (23) என அடையாளம் காணப்பட்டாா். அவரிடமிருந்து, நியூ உஸ்மான்பூா் மற்றும் விவேக் விஹாா் ஆகிய பகுதிகளில் இருந்து திருடப்பட்ட 3 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன. குற்றம்சாட்டப்பட்ட சித்தனுக்கு கொள்ளை, வழிப்பறி, திருட்டு, ஆயுதச் சட்டம் மற்றும் கலால் சட்டம் ஆகிய 9 வழக்குகளில் தொடா்புடையவா் என தெரிய வந்தது. இவருக்கு எதிராக நந்த் நாக்ரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments