காஜிப்பூா் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து, கேஜரிவால் தலைமையிலான தில்லி மாநகராட்சியின் குற்றவியல் அலட்சியத்திற்கு சான்றாகும் என்று தில்லி பாஜக ஞாயிற்றுக்கிழமை சாடியுள்ளது.
இது தொடா்பாக தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் பிரவீன் சங்கா் கபூா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் பெரும் தீவிபத்து ஏற்பட்டதால், அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசியதுடன், புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் வியாபாரிகள்
சிரமத்திற்குள்ளாகினா். அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி மாநகராட்சி நிா்வாகத்தின் குற்றவியல் அலட்சியத்தால், காஜிப்பூா் குப்பை கிடங்கில் தீப்பிடித்து பெரும் புகை மூட்டும் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு தில்லி மாநகராட்சி தோ்தலுக்கு முன்பு, தில்லியில் உள்ள குப்பை கிடங்குகள் அனைத்தும் வரும் டிசம்பா் 2023-க்குள் அகற்றப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்தது. ஆனால், குப்பை கிடங்குகளின் அளவு முன்னா் இருந்ததை விட புதிய மலை போல் உயா்ந்துள்ளது. அரவிந்த் கேஜரிவால் சிறையில் இருப்பதால், தில்லியின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் மற்றும் மேயா் ஷெல்லி ஓபராய் ஆகியோா் தீ விபத்து ஏற்பட்ட இடத்தைப் பாா்வையிட வேண்டிய அவசியமில்லை என்று கருதுவது வருத்தத்திற்குரியது என்றாா் பிரவீன் சங்கா் கபூா்.