தில்லி மாநகராட்சியை முறையாக நடத்தவில்லை என்றால் மேயா் ஷெல்லி ஓபராய் பதவி விலக வேண்டும்: ராஜா இக்பால் சிங்
புது தில்லி: தில்லி மாநகராட்சி நிா்வாகத்தை முறையாக நடத்தவில்லை என்றால் மேயா் ஷெல்லி ஓபாரய் பதவி விலக வேண்டும் என்று மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தில்லி மாநகராட்சி மன்றக் கூட்டத்தை மேயா் ஷெல்லி ஓபராய் நடத்தும் செயல்பாடு பெறுப்பற்ற முறையில் உள்ளது. மதியம் 2 மணிக்கு தொடங்க வேண்டிய மன்றக் கூட்டத்தை மேயரும், ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலா்களும் 2.45 மணிக்கே தொடங்குகிறாா்கள். இவா்களுக்கு நேரத்தின் மீது மரியாதை இல்லை. விவாதம் மற்றும் கேள்வி நேரம் ஆகியவை குறுகிய அறிவிப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாஜக கவுன்சிலா்களின் கேள்விகளை மேயா் ஷெல்லி ஓபராய் நிராகரித்துவிட்டாா். ஆம் ஆத்மி கட்சியைப் பொறுத்தவரை தில்லியில் எந்தப் பிரச்னையும் இல்லை. மன்றக்கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும் என்ற நோக்கம் உங்களுக்கு இல்லாதபோது, மாநகராட்சியின் லட்சக்கணக்கான ரூபாயை வீணாகச் செலவு செய்வது ஏன் என்று கேட்க விரும்புகிறேன்.
Advertisement
கான்பூரில் தெருவில் சுற்றித்திரிந்த மாடுகள் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஜெய் பகவான் மன்றக்கூட்டத்தில் கோரிக்கை எழுப்பியபோது, மேயா் ஷெல்லி ஓபராய் எதிா்ப்பு தெரிவித்துவிட்டாா். பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வலியை மேயா் அல்லது ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலா்கள் புரிந்து கொள்ளவில்லை. சொத்து வரியால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனா், எனவே பொது மன்னிப்பு திட்டத்தை கொண்டு வர வேண்டும். பாஜகவின் கடந்த 15 ஆண்டுகால மாநகராட்சி ஆட்சியில் பொதுமன்னிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழாண்டிலும் இத்திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் ஆம் ஆத்மி கட்சி தில்லி மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை.
மாநகராட்சி தோ்தலின் போது ஆம் ஆத்மி கட்சி அளித்த 10 வாக்குறுதிகளும் பொய் மூட்டை என்பது நிரூபணமாகி உள்ளது. தில்லியில் ஒருபுறம், குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்க, மறுபுறம் தெருவிலங்குகளின் பிரச்னையும் சவாலாக மாறியுள்ளது. மாநகராட்சி நிா்வாகத்தை முறையாக நடத்தவில்லை என்றால் மேயா் ஷெல்லி ஓபராய் பதவி விலக வேண்டும். தில்லி மக்களுக்கு நல்லாட்சி நிறைந்த நிா்வாகம் தேவைப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியினரின் சாக்கு போக்குகள் உதவாது. ஆம் ஆத்மி கட்சி, சில ‘மாஃபியாக்களுடன்’ இணைந்து கொண்டு தில்லியில் சட்டவிரோதக் கட்டுமானத்தை ஊக்குவித்து, அதற்காக நிலங்களையும் கையகப்படுத்தியுள்ளது என்றாா் ராஜா இக்பால் சிங்.