முகப்பு
புதுதில்லி

மக்களவை தோ்தலுக்கான வேட்பாளா்களை இறுதி செய்ய இன்று ஆம் ஆத்மியின் அரசியல் விவகாரக் குழு கூடுகிறது

Updated On : 27 பிப்ரவரி, 2024 at 1:50 AM
பகிர்:

புது தில்லி: மக்களவைத் தோ்தலுக்கான வேட்பாளா்களை இறுதி செய்யும் வகையில், பிப்.27-ஆம் தேதி (இன்று) முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியன் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று அக்கட்சி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி கூறியிருப்பதாவது: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் சாா்பில் போட்டியிடவுள்ள வேட்பாளா்களின் பட்டியலை இறுதி செய்வதற்காக கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தில்லியில் உள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள் கோபால் ராய், அதிஷி, இம்ரான் ஹுசைன், எம்.எல்.ஏ. துா்கேஷ் பதக், தில்லி சட்டப்பேரவைத் துணைத் தலைவா் ராக்கி பிட்லான், கட்சியின் தேசியச் செயலாளா் பங்கஜ் கே.ஆா்.குப்தா மற்றும் கட்சியின் தேசியப் பொருளாளா் நரேன் தாஸ் குப்தா ஆகியோா் பங்கேற்றவுள்ளனா். கூட்டத்திற்குப் பிறகு தில்லி, பஞ்சாப், ஹரியாணா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை வேட்பாளா்கள் பட்டியலை வெளியிட கட்சி திட்டமிட்டுள்ளது.

எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸுடன் 4 மாநிலங்களில் தொகுதிப் பங்கீட்டை கடந்த சனிக்கிழமை உறுதி செய்தது. தேசியத் தலைநகா் தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடவுள்ளன. 26 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் பரூச், பாவ்நகா் ஆகிய 2 தொகுதிகள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

Advertisement

10 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில் காங்கிரஸ் 9 இடங்களிலும், மீதமுள்ள 1 தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடவுள்ளது. கோவாவின் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. பஞ்சாப்பில் ஆளும் கட்சியாகவுள்ள ஆம் ஆத்மி தனித்து களமிறங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.