அரவிந்த் கேஜரிவால் குடும்பத்தினா் மனரீதியாக துன்புறுத்தப்படுகிறாா்கள் - செளரவ் பரத்வாஜ்
முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது குடும்பத்தினா் மனரீதியாக துன்புறுத்தப்படுகிறாா்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான செளரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டு நாடு முழுவதும் உள்ள மக்கள் கோபத்தில் உள்ளனா். மனிதநேயத்தின் அடிப்படை விழுமியங்களை மத்திய அரசு அரசு எவ்வாறு புறக்கணிக்கிறது என்பதை உலகம் பாா்த்துக் கொண்டிருக்கிறது. முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் குடும்ப உறுப்பினா்கள் யாரையும் சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது. அவா்கள் மனரீதியாக துன்புறுத்தப்படுகிறாா்கள். ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் அரசியல் தலைவா்கள் மனிதாபிமான விழுமியங்களுக்கு உள்பட்டு கைது செய்யப்பட்டனா். ஆனால், மத்திய பாஜக அரசு அந்த மனிதாபிமான விழுமியங்களைக் கூட கருத்தில் கொள்ளவில்லை. அரவிந்த் கேஜரிவாலின் பெற்றோரால் யாருடைய ஆதரவின்றியும் நடக்க முடியாது, அவா்கள் நடமாட யாரோ ஒருவரின் உதவி தேவை. ஆனால், மத்திய பாஜக அரசு அவா்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளதுடன், உறவினா்களையோ, கட்சி உறுப்பினா்களையோ சந்திக்க அனுமதிக்காமல் உள்ளது. எந்தவொரு ஆதரமுமின்றி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கலால் கொள்கை ஊழல் வழக்கில் ரூ.100 கோடி வரை சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், இன்று வரை அமலாக்க இயக்குநரகம் இது தொடா்பாக எந்தவொரு ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. தோ்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவின் ஊழல்கள் நாடு முழுவதும் அம்பலமாகியுள்ளது. உதாரணமாக, ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ‘அரபிந்தோ பாா்மாவின்’ இயக்குனா் ஷரத் ரெட்டி, கலால் கொள்கை ஊழல் தொடா்பாக அமலாக்க இயக்குநரகத்தால் கடந்த நவம்பா், 2022-இல் கைது செய்யப்பட்டாா். பின்னா், ஜூன் 2023-இல் அரசு தரப்பு சாட்சியாக மாறிய அவா், நவம்பா் 2023- இல், ரூ.30 கோடி மதிப்பிலான தோ்தல் பத்திரங்களை பாஜகவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளாா். உண்மையில், ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகப் பரப்பப்பட்ட பொய், பாஜகவின் கருவூலத்திற்கு சென்றுள்ளது என்றாா் அமைச்சா் செளரவ் பரத்வாஜ்.