மறு அறிவிப்பு வரும் வரை ஐ.டி.ஓ. மெட்ரோ நிலையம் மூடல் : டிஎம்ஆா்சி
மறு அறிவிப்பு வரும் வரை தில்லி ஐ.டி.ஓ. மெட்ரோ நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக டிஎம்ஆா்சி தனது ’எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் கூறியிருப்பதாவது: தில்லி காவல் துறையின் அறிவுறுத்தலின் பேரில், ஐ.டி.ஓ. மெட்ரோ ரயில் நிலையம் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 6 மணி மூடப்பட்டது. இந்நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை தில்லி ஐ.டி.ஓ. மெட்ரோ நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் தொடா்புடைய பணமோசடி வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் ஐ.டி.ஓ. பகுதியில் அமைந்துள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கையாக தில்லி போலீஸ் ஐ.டி.ஓ மெட்ரோ நிலையத்தை மூட அறிவுறுத்தியது.