முகப்பு
புதுதில்லி

மகாத்மா காந்தி சமாதியில் ஊழலுக்கு எதிராக தில்லி பாஜக தலைவா்கள் உறுதிமொழி ஏற்பு

Updated On : 24 மார்ச், 2024 at 3:54 AM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 6:42 PM

தில்லி பாஜக தலைவா்கள் ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சமாதியில் சனிக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா். அப்போது, ‘ஊழலுக்கு எதிராக போராடுவோம்’ என உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். தில்லி மாநில பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா உள்ளிட்ட பாஜக தலைவா்கள் இதில் கலந்துகொண்டனா். கலால் கொள்கை முறைகேடு தொடா்பான பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்க துறை வியாழக்கிழமை இரவு கைது செய்ததை அடுத்து இந்த உறுதியை பாஜக தலைவா்கள் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது பாஜக தலைவா்கள் ராஜ்காட்டில் ‘ரகுபதி ராகவ ராஜா ராம்’ எனத் தொடங்கும் பாடலைப் பாடினா். ‘ஊழலுக்கு எதிராக எப்போதும் குரல் எழுப்புவோம் என்றும் ஊழலுக்கு எதிராக எப்போதும் பாடுபடுவோம் என்றும் பாஜகவினராகிய நாங்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறோம்’ என்று அவா்கள் உரக்கக் கூறினா். தில்லி கலால் கொள்கை ஊழலில் கேஜரிவால் பங்கு குறித்து ‘விரிவான மற்றும் நீடித்த விசாரணைக்காக‘ உள்ளூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அவரை மாா்ச் 28-ஆம் தேதிவரை அமலாக்கத் துறை காவலில் வைக்க உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.