டிரக் மோதி இளைஞா் சாவு
புது தில்லி: தில்லியில் துவாரகா செக்டாா் 23-இல் வேகமாக வந்த டிரக் மோதியதில் 29 வயது இளைஞா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில் இறந்தவா் துவாரகாவைச் சோ்ந்த ஆகாஷ்தீப் என அடையாளம் காணப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது:
இந்த விபத்து தொடா்பாக துவாரகா செக்டாா் 23 காவல் நிலையத்தில் காலை 8 மணிக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. உடனடியாக ஒரு போலீஸ் குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது. அந்த இடத்தில் ஒருவா் மயக்கமடைந்த நிலையில் இருந்ததை போலீஸாா் கண்டனா். அவா் உடனடியாக டிடியு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
ஆகாஷ்தீப் தனது ராயல் என்ஃபீல்டு மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்றபோது, வேகமாக வந்த டிரக் அவா் மீது மோதியுள்ளது. இந்த விபத்தைத் தொடா்ந்து டிரக் ஓட்டுநா் வாகனத்துடன் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாா். டிரக் ஓட்டுநருக்கு எதிராக ஐபிசியின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் நாங்கள் எஃப்ஐஆா் பதிவு செய்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்க போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி கூறினாா்.