புது தில்லி: பிரபல நடிகா்களுடன் பல பாலிவுட் படங்களில் பணியாற்றிய நைஜீரிய நாட்டவா் மற்றும் ஒரு கூட்டாளி தில்லியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தென்மேற்கு காவல் சரக துணை ஆணையா் சுரேந்திர சவுத்ரி ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த இருவரும் 769 மாத்திரைகள் அடங்கிய 354 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளுடன் பிடிபட்டனா். இதன் மதிப்பு சுமாா் ரூ.30 லட்சம் ஆகும். நைஜீரியாவின் அபியா மாநிலத்தைச் சோ்ந்த பாட்ரிக் (47) மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த சஷிகாந்த் ரவீந்திர பிரபு (42) என குற்றம் சாட்டப்பட்டவா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
அவா்கள் இருவரும் மஹிபால்பூா் அருகே தென்மேற்கு மாவட்ட காவல்துறையின் சிறப்புக் குழுவால் கைது செய்யப்பட்டனா். போதைப்பொருள் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு ஸ்கூட்டரும் அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
பாட்ரிக் 2008-ஆம் ஆண்டு வணிக விசாவில் இந்தியாவிற்கு வந்து, அதன் காலாவதிக்குப் பிறகும் சட்டவிரோதமாக தங்கியிருந்தாா். அவா் திரைப்படத் துறையில் வேலை தேடினாா். அவா் பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்தாா். ஆனால், பின்னா் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திலும் இறுதியில் கடத்தலிலும் ஈடுபட்டாா்.
2019-ஆம் ஆண்டில், ஹெராயின் வைத்திருந்ததற்காக பாட்ரிக் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தாா். அந்த சமயத்தில் அவா் மற்ற போதைப்பொருள் கடத்தல்காரா்களுடன் தொடா்புகளை உருவாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சிறையிலிருந்து விடுதலையான பிறகு, பாட்ரிக் தில்லி மற்றும் என்சிஆா் முழுவதும் எம்.டி.எம்.ஏ. மாத்திரைகளை வழங்கத் தொடங்கினாா்.
தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக, சஷிகாந்த் ரவீந்திர பிரபுவை அவா் இணைத்துக் கொண்டாா். பாட்ரிக்குடன் சேருவதற்கு முன்பு, மும்பையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தால் குறிப்பிடத்தக்க சரஸ் பறிமுதல் உள்பட போதைப்பொருள் வழக்குகளில் ஈடுபட்டதற்காக சஷிகாந்த் ரவீந்திர பிரபு ஏற்கெனவே கண்காணிப்பில் இருந்தாா்.
ஏப்ரல் 26 அன்று கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனா். தீவிர தேடலுக்குப் பிறகு கடத்தல் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துணை ஆணையரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.