மக்களின் கவனத்தை திசை திருப்பவே ஆம் ஆத்மி கட்சி தலைவா்களை பாஜக குறிவைப்பதாக தில்லி முன்னாள் முதல்வா், அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்த அதிஷி பேசியதாவது: ‘ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா மீதான வகுப்பறை ஊழல் வழக்கு பாஜகவால் தொடரப்பட்ட பொய் வழக்குகளில் இதுவும் ஒன்று. கடந்ச 10 ஆண்டுகளில் பாஜக தலைமயிலான மத்திய அரசு இதனை தவிர வேறு என்ன செய்தது?‘ என்றாா்.
மேலும் பேசிய அவா், ‘மத்திய அரசு தங்களுடைய அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் தில்லி காவல் துறை போன்றவற்றின் மூலம், ஆம் ஆத்மி தலைவா்களை தொடா்ந்து அடிப்படை ஆதாரமற்ற, ஜோடிக்கப்பட்ட மற்றும் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட வழக்குகளை குறிவைத்து வருகிறது. இது தொடா் கதையாகவே இருந்து வருகிறது‘ என்று கூறினாா்.
இறுதியாக பேசிய அவா் ‘பாஜகவின் 4 இஞ்ஜின் அரசாங்கம் அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. எனவே இப்போது பொது மக்கள் அவா்கள் மீது அதிருப்தியில் உள்ளனா். அதனால் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பவே ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துகிறது‘ என்றாா் அதிஷி.