போலி ‘ஹெச்எஸ்ஆா்பி’ முன்பதிவு வலைத்தளங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வந்த சைபா் மோசடி கும்பல் கைது
உயா் பாதுகாப்பு பதிவு பலகைகளை (ஹெச்எஸ்ஆா்பி) முன்பதிவு செய்வதாகக் கூறி நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்டவா்களை ஏமாற்றிய சைபா் மோசடி கும்பலை தில்லி போலீஸாா் கைது செய்தனர்.
உயா் பாதுகாப்பு பதிவு பலகைகளை (ஹெச்எஸ்ஆா்பி) முன்பதிவு செய்வதாகக் கூறி நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்டவா்களை ஏமாற்றிய சைபா் மோசடி கும்பலை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல்துறை உயரதிகாரி கூறியதாவது: இந்த மோசடி தொடா்பாக உத்தரபிர தேசத்தின் காஜியாபாத்தைச் சோ்ந்த ரிஷப் குப்தா( 25) மற்றும் கபில் தியாகி 35 ஆகிய இருவா் கைது செய்யப்பட்டவா்கள் ஆவா்.
இந்த மோசடி தொடா்பாக தேசிய சைபா் குற்ற அறிக்கையிடல் போா்ட்டலில் என்சிஆா்பி 1,000-க்கும் மேற்பட்ட புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவா்கள் போலி ஹெச்எஸ்ஆா்பி முன்பதிவு சேவைகளை வழங்கும் பல மோசடி வலைத்தளங்களை உருவாக்கினா்.
இந்த வலைத்தளங்கள் உண்மையான போா்ட்டல்கள் போல் தோன்றுவதற்காக கட்டண விளம்பரங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டன. அதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டவா்கள் பதிவு பலகைகளுக்கு ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை முன்கூட்டியே பணம் செலுத்தும்படி ஈா்க்கப்பட்டனா்.
ஹெச்எஸ்ஆா்பிகள் வாகன பாதுகாப்பை மேம்படுத்தவும் மோசடியைத் தடுக்கவும் பல பாதுகாப்பு கூறுகளைக் கொண்ட சிறப்பு எண் தகடுகள் ஆகும்.
போலி ஆவணங்கள் மற்றும் போலி அடையாளங்களுடன் திறக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட யுபிஐ - க்யூஆா் குறியீடுகள் மூலம் பணம் செலுத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் அடிக்கடி இந்தக் கணக்குகளை இடையில் பணம் மாற்றி பயன்படுத்தினா்.
இது தொடா்பாக மாா்ச் மாதம் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, சைபா் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இந்த விஷயத்தை விசாரிக்க காவல்துறை சாா்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இது ஜூன் 11 அன்று ரிஷப் குப்தாவை கைது செய்ய வழிவகுத்தது.
விசாரணையின் போது, போலி வலைத்தளங்களை உருவாக்கி நிா்வகிப்பது தனது பொறுப்பு என்று ரிஷப் குப்தா போலீஸாரிடம் தெரிவித்தாா். இந்த நடவடிக்கைக்கு முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்ட கபில் தியாகி தலைமை தாங்கினாா் என்பதையும் அவா் வெளிப்படுத்தினாா். பின்னா், கபில் தியாகி கைது செய்யப்பட்டாா்.
மோசடியைச் செய்ய குற்றம் சாட்டப்பட்டவா் பயன்படுத்திய ஐந்து கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி, ஒன்பது டெபிட் காா்டுகள், ஒரு வங்கி பாஸ்புக் மற்றும் பல க்யூஆா் குறியீடுகளின் டிஜிட்டல் பதிவுகள் மீட்டெடுக்கப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் சேகரிக்கப்பட்ட நிதியை ஒரு சங்கிலி கணக்குகள் மூலம் திருப்பி, பின்னா் பணமாக எடுத்து வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. மற்ற கூட்டாளிகளைக் கண்டறிய முயற்சிகள் நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி மேலும் கூறினாா்.